இடதுசாரி கொள்கைகளும் இயக்கங்களும் காலங்காலமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூல் அதன் காரணாகாரியங்களைத் தேடி தர்க்கபூர்வமான விமர்சனத்தை ஆழமாக முன்வைக்கிறது. பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகிய கருத்தாக்கங்களிலிருந்து இந்த நூலை அரவிந்தன் நீலகண்டன் விரிவாகத் தொடங்குகிறார்.
ஜெர்மானிய அறிஞர் ஃப்ரடரிக் ஹெகல், தன் தத்துவ வாசிப்பின் வழி இருப்பை முரண்படும் இரட்டைகளாக அறிந்தார். இந்த முரண்படும் இரட்டைகள் என்கிற அம்சத்தைத்தான் காரல் மார்க்ஸ் சுவீகரித்துக்கொண்டார் என நூலாசிரியர் மதிப்பிடுகிறார்.
இருப்பின் இந்த முரணை பொருள்வாத முரணியக்கமாக மார்க்ஸ் மாற்றி எழுதினார் என்பது அரவிந்தனின் துணிபு. உற்பத்தி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு வர்க்கம் கட்டி அமைக்கப்பட்டு சோஷலிஸம் உருவாகும் என்கிற மார்க்ஸின் பார்வைக்கு முடிவு என்ன, எனக் கேள்வி எழுப்புகிறார் நூலாசிரியர்.
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்குப் பிறகு என்ன ஆகும் என்கிற கேள்வியையும் எழுப்புகிறார். மார்க்ஸியச் சித்தாந்தத்தை வழிநடத்த ஒரு புரட்சிகர அமைப்பு தேவை என லெனின் கருதினார். உலகமெங்கும் சோஷலிஸம் ஏற்படக் காத்திருக்க வேண்டியதில்லை; புரட்சி ஏற்படும் நாடுகளை சோஷலிஸ நாடாக மாற்ற வேண்டும் என ஸ்டாலின் கருதினார் .
இவ்வாறு நூலாசிரியர் சொல்கிறார். மாவோ, விவசாய குட்டி பூர்ஷ்வாக்களின் புரட்சியை மார்க்ஸியமாக வியாக்கியானம் செய்துகொண்டார் என அரவிந்தன் விமர்சிக்கிறார். லெனின், ஸ்டாலின் காலகட்டத்திய இரு கட்டுரைகள் வழி அரவிந்தன் விவரிக்கிறார். புரட்சிக்குப் பிறகு நாடாளுமன்ற ஜனநாயக முறையைச் சிலர் முன்மொழிந்தது குறித்தும் இந்தப் பகுதியில் நூலாசிரியர் சொல்கிறார்.
ஸ்டாலின் கட்டாயக் கூட்டுப்பண்ணை வேளாண்மைக்கு உழவர்களை நிர்ப்பந்தித்தது குறித்து கட்டுரையாளர் விமர்சனங்களை முன்வைக்கிறார். ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசியதற்காக நிகோலாய் புகாரின் தண்டிக்கப்பட்டதையும் இந்த நூல் சொல்கிறது.
அரசுக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் தலைவர்கள் எல்லாரும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. மார்க்ஸியக் காலத்தில் உருவான பஞ்சங்களைச் சுட்டி, அவை முதலாளிகளால் மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதையும் கட்டுரை கூறுகிறது.
நேருவின் சோஷலிஸ ஈடுபாடும், ஸ்டாலினின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு ஐந்தாண்டுத் திட்டங்களை அவர் உருவாக்கியதையும் இந்த நூல் குறிப்பிடுகிறது; இதனால் ஏற்பட்ட பலவீனங்களையும் சுட்டுகிறது. இந்தியப் பிராந்தியத்தில் மார்க்ஸியம் என்கிற சித்தாந்தம் என்ன செய்தது என்பதையும் இந்த நூல் விரிவாகச் சொல்கிறது. - விஜித்ரன்
பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
அரவிந்தன் நீலகண்டன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 8148066645
உளவு முகமையின் உண்மை முகம்: பாலஸ்தீனத்தின் முக்கியத் தலைவர் மஹ்மூத் அல்-மபூஹ் கொலையை ஒரு சினிமா காட்சி போல சித்தரிக்கும் அத்தியாயத்துடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. மொஸாட்டின் இயல்பு என்ன, அதன் செயல்படும் விதம் எப்படி என்பன பற்றியெல்லாம் நூலாசிரியர் அறிமுகம் செய்துவைக்கிறார். இந்தக் கொலைக் காட்சியை வாசிக்கும்போது நிஜம், சினிமாவைவிட எவ்வளவு தீவிரமானது என்பது புலனாகிறது.
அதுபோல் மொஸாட்டின் பிரபலமான உளவாளி எலியாஹூ கோஹன் குறித்த சித்தரிப்பும் சுவாரசியமானது. அவரை உளவுக்காகத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி அவர் சிரியாவில் தன் உளவுப் பணியைத் தொடங்கியது வரையிலான விவரிப்பின் வழி உளவு அமைப்பின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது. உலக அளவில் பிரசித்திபெற்ற இத்தாலியின் உளவு அமைப்பான மொஸாட் பற்றிய முழுமையான சித்திரத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது. - விபின்
மொஸாட்
நன்மாறன் திருநாவுக்கரசு
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 42009603