அரூபத்திலிருந்து ரூபத்தைக் கொண்டு வருவது ஓவியக் கலை. ஓவியக் கலையில் எத்தனையோ வகைமைகள் இருந்தாலும் கற்பனை, படைப்பாற்றல், செய்நேர்த்தி, உருவாக்கம் போன்றவற்றில் தன்னிகரற்ற சிறப்பைக் கொண்டது தஞ்சாவூர் ஓவியக்கலை.
இதனையே தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான கருப்பொருளாக ஆய்வு செய்திருக்கிறார் ஜெ.அமுதன். ஓவியத் துறையில் நுண்மான் நுழைபுலம் மிக்க நூலாசிரியரின் திறமை, நூலின் பக்கத்துக்குப் பக்கம் பளிச்சிடுகிறது.தகவல்களை வெறுமனே சொல்லிவிட்டுச் செல்லாமல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தொல்லியல் சார்ந்த தரவுகளுடன் `தஞ்சாவூர் ஓவியக்கலை' குறித்த முழுமையான ஓர் ஆவணத்தை இந்த நூலின்வழியாக வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர்.
`இலக்கியம் போற்றும் தஞ்சாவூர் ஓவியக்கலை', `தஞ்சாவூர் ஓவியக் கலையின் வரலாறு', `தஞ்சாவூர் ஓவியக்கலை உருவாக்கம்', `தொன்மை கால ஓவிய அமைப்பு முறைகள்', `ஒப்பீட்டு நோக்கில் சோழர் காலம் முதல் தஞ்சாவூர் ஓவியக்கலை வரை'உள்ளிட்ட தலைப்புகளில் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை ஒழுங்குபடுத்தியுள்ளதிலேயே நேர்த்தி வெளிப்படுகிறது.
தில்லை கோயிலின் சாந்தார அறையின் சுவரில் இடம்பெற்றுள்ள திரிபுராந்தகர் ஓவியக்காட்சி, பதினேழாம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கும் `வாத்திய இசை மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்கள்' என்னும் ஓவியங்களின் மூலம் இந்நூல், புராண காலத்தில் நடந்த சம்பவத்தையும், சில நூறாண்டுகளுக்கு முந்தைய சமூக நிலையையும் கடத்தும் கதை சொல்லியாகவும் பரிணமிக்கிறது. - யுகன்
தஞ்சாவூர் ஓவியக்கலை
முனைவர் ஜெ.அமுதன்
கேஜி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 550.
தொடர்புக்கு: 94423 98953.
செறிவான கட்டுரைகளின் தொகுப்பு | சிற்றிதழ் அறிமுகம்: ‘காக்கைச்சிறகினிலே’ மாத இதழின் தமிழர் திருநாளுக்கான பதிப்பு, தமிழர் வரலாற்றில் நெடுங்காலமாகக் கவனத்தை ஈர்த்துவரும் பேசுபொருள்களிலிருந்து சமகாலச் சிக்கல்கள் வரை பல படைப்புகளின் நேர்த்தியான தொகுப்பாக வெளிவந்துள்ளது.
வரலாற்றாய்வாளர் மே.து.ராசுகுமார் எழுதியுள்ள ‘தமிழ்நாட்டு வரலாற்றில் இருண்ட காலம் இருந்ததா?’ என்கிற கட்டுரை, சங்க இலக்கியப் பாடல்களை முன்வைத்து, ஆட்சியாளர்களுக்கு இணையாக வளமான நில உரிமையாளர்கள் பொருளாதார வலிமை பெற்றதையும் உற்பத்தியில் முன்னேறிய சமூகம் போர்த்திறத்தில் வல்லமையை இழந்ததையும் கூறி, சங்க காலத்துக்கும் பல்லவர் காலத்துக்கும் இடைப்பட்டதை பெரு உற்பத்திக்கு முன்னோட்டக் காலமாகக் கூறுகிறது.
அதுவரையான காலனிமயமாக்க அணுகுமுறையிலிருந்து முற்றிலும் விலகி நின்று, தென்னிந்தியா குறித்து முதல்நிலைச் சான்றுகளின் துணையோடு, ஆய்வை மேற்கொண்ட நொபுரு கராஷிமா எழுதிய முன்னோடி நூல் 'தென்னிந்திய வரலாறும் சமூகமும்: பொ.ஆ. 850-1800 வரையான சான்றுகள் வழியிலான ஆய்வுகள்.’
இதற்கு கி.இரா.சங்கரன் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரை, முதலாம் ராஜராஜசோழன் நாட்டின் முந்தைய நிலப்பிரிவுகளை ஒருங்கிணைத்து வளநாடு என்கிற அலகுகளாக மாற்றியதையும் இது மையப்படுத்தப்பட்ட அரசு வலுப்பெற உதவியதையும் தொடக்கத்தில் இருந்த கூட்டு நிலவுடைமைகள் குறைந்து பிற்காலத்தில் தனியார் நிலவுடைமைகள் அதிகரித்ததையும் விளக்குகிறது.
சிறுகதைகள், கவிதைகள், நூல்களுக்கான மதிப்புரைகள் போன்றவையும் இதழுக்குச் செறிவைக் கூட்டுகின்றன. பரிணாம உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் ‘மேஜிக் ஆஃப் ரியாலிட்டி’ நூலை எழுதியதையொட்டி ஆயிஷா இரா. நடராசன் எடுத்த நேர்காணல், நம்பிக்கைவாதத்திலிருந்து வெளியேறி அறிவியல்வாதத்துக்கு வருவது குறித்துக் குழந்தைகளிடம் பேச விழைகிறது.- ஆனந்தன் செல்லையா
காக்கைச்சிறகினிலே
மாத இதழ்
ஆசிரியர்: வி.முத்தையா
விலை: ரூ.50
தொடர்புக்கு: 98414 57503
நறுமணம் கமழும் தந்தைமை: கவிதைத் தளத்தில் தொடர்ந்து காத்திரமாக இயங்கிவரும் ஜெயபாஸ்கரனின் புதிய கவிதை நூலிது. இந்நூலிலுள்ள கவிதைகள் தந்தை - மகள் உறவுகளுக்குள்ளான வாழ்வின் ஈரத்தைத் தொட்டு எழுதப்பட்டுள்ளன. தந்தைக்கும் மகளுக்குமான அன்பின் பகிர்தலை கவித்துவத்துடன் காட்சிப்பூர்வமாகவும் விவரிக்கும் இக்கவிதைகளை வாசிக்கையில், அவரவரின் தந்தையைப் பற்றியும் மகள்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்குமளவுக்கு வாசக நெருக்கத்தை உண்டாக்குகின்றன.
திருமணமாகிப் புகுந்தகம் சென்ற மகள், திரும்பவும் பிறந்தகத்திற்கு வந்திருக்கையில் இப்படிப் பேசுகிறாள்: ‘மாமியார் வீட்ல இருந்து/இப்ப எங்க அம்மா வீட்டுக்கு/வந்திருக்கேன்/என்று யாரிடமோ/சொல்லிக் கொண்டிருக்கிறாய்/ உனக்கென்று/ஒரு வீடற்றவளாக’ எனும் வரிகள் ஏதோவோர் மகளுக்கான கவிதையாக இல்லாமல், ஒட்டுமொத்த பெண்களின் உள்ளக்குமுறலாக ஒலிக்கிறது.
இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது பயணடத் தூரங்களை வெகுவாகக் குறைத்துவிட்ட போதிலும் உறவுகளின் வீடுகளுக்குச் செல்வதென்பது ஏனோ குறைந்திருக்கிறது. யாரையேனும் பார்க்க வேண்டுமென்கிற ஆசை வந்தால் இருக்கவே இருக்கிறது ‘வீடியோ கால்.’
‘நீ வந்திருப்பதாகச்/சிறுவர்கள் கூச்சலிட/வாசலுக்கு வந்திறங்கி/எதையெதையோ சொல்லியபடி/வீட்டிற்குள் நுழைகிற/உனது வருகையின் நறுமணம்/காணொலியில் கிடைக்குமா?’ என்று கேட்டு, தன் மகளை ‘வந்துபோ செல்லமே...’ என்றழைக்கும் ஒரு தந்தைமையின் நறுமணம் கமழும் அன்பினை உணர்த்துவதில் கவிஞரது கவிதைகள் கவனம் பெறுகின்றன.- மு.முருகேஷ்
மகள் இருந்த வீடு
ஜெயபாஸ்கரன்
வழுதி வெளியீட்டகம்
விலை: ரூ. 200
தொடர்புக்கு: 9444956924