திருநர் சமூகத்தினருக்கும் பொதுச் சமூகத்தினருக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும் பாலமாக செயல்படுகிறது `சாதிக்கப் பிறந்தவர்கள் கூட்டமைப்பு'. இந்த அமைப்பு வழங்கும் 10வது திருநர் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் ராணி சீதை அரங்கத்தில் நடந்தது.
ஏப்ரல் 15ம் தேதி தேசிய திருநங்கை தினத்தை முன்னிட்டு `சிகரம் தொட்ட திருநர் விருதுகள்' 27 திருநருக்கும், 3 விருதுகள் நட்பை பாராட்டும் திருநங்கை ஆதரவாளருக்கும் வழங்கப்பட்டது.
இதில் மருத்துவம், கல்வி, சுயதொழில், அழகி, ஆன்மிகம், அரசியல், திருநர் நல்வாழ்வு மற்றும் சமூகம் சார்ந்த பணிகள், ஆடை வடிவமைப்பாளர், சமூக சேவகி, சமூக ஆர்வலர்கள் போன்ற 27க்கும் மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்கும் திருநர்களை அடையாளம்கண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
விழா குறித்து சாதிக்கப் பிறந்தவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சுவேதா கூறியதாவது:
"இந்த விருது விழா ஒவ்வொரு ஆண்டும் எங்கள் சமூகத்தில் உள்ள திறமை மிக்க திருநர்களைப் பாராட்டவும் அவர்களுக்கான கவுரவத்தை அளிப்பதற்கும் அளிக்கப்படுகிறது. தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிசா, மணிப்பூர் போன்ற பல்வேறு மாநிலங்களிருந்து திருநர்கள் வருகை புரிந்திருந்தனர்.
முதல் திருநங்கை ஆவணப்பட இயக்குநருக்கான விருது திருநங்கை ப்ரியா பாபுவுக்கு வழங்கப்பட்டது. முதல் கால்நடை மருத்துவ உதவியாளராக (அரசுப் பணி) நியமிக்கப்பட்டிருக்கும் சமீரா, புவனேஸ்வரைச் சேர்ந்த இளம் திருநர் செயற்பாட்டாளர் ஆசிஷா பெஹாரா, விழுப்புரத்தைச் சேர்ந்த திருநர் நலனுக்கான செயற்பாட்டாளர் மர்லிமா முரளிதரன், மணிப்பூரைச் சேர்ந்த திருநர் கல்விக்காக பாடுபடும் தினேஷ் சர்மா, தெலங்கானாவைச் சேர்ந்த திருநர் மருத்துவர் டாக்டர் பிராச்சி ரத்தோட் உள்ளிட்டவர்கள் இந்தாண்டுக்கான சிகரம் தொட்ட திருநருக்கான விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது."
இவ்வாறு சுவேதா கூறினார்.
விழாவில் திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், சமூக நலத்துறை அதிகாரி ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.