தருமபுரியில் நேதாஜி படைப்பிரிவு பெண் கமாண்டர் கவுரவிப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரியில் ‘மை தருமபுரி’ அமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடந்தது. தருமபுரியில் செயல்பட்டு வரும் ‘மை தருமபுரி’ என்ற தன்னார்வ அமைப்பு பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 46 சடலங்களை போலீஸாருடன் இணைந்து இறுதிச் சடங்கு செய்து நல்லடக்கம் செய்துள்ளனர். அதேபோல, கரோனா முழு ஊரடங்கின் போது, ஏழை, எளியோர், யாசகர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் நகரில் முக்கிய இடங்களில் உணவுப் பொட்டலங்கள் வைத்து விநியோகம் செய்தனர்.

இந்தப் பணிகளை தற்போது வரை இந்த அமைப்பினர் தொடர்கின்றனர். இந்த திட்டத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, நேதாஜியின் தேசிய ராணுவப் படைப் பிரிவில் இடம்பெற்றிருந்த, தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த பெண் கமாண்டரான சிவகாமியம்மாவின் 92-வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா ‘மை தருமபுரி ’அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது.

இவ்விழாவில், சிவகாமியம்மாவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். இவ்விழாவில் அமைப்பின் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE