அம்பாஸிடர் காரில் நாகாலாந்து மாநில அமைச்சர்: வைரலாகும் ட்வீட்!

By செய்திப்பிரிவு

கோஹிமா: அம்பாஸிடர் காரில் பயணம் செய்ய தான் ஆயத்தமாகும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நாகாலாந்து மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா (Temjen Imna). அது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் படு வைரலாகி உள்ளது. அதோடு பலரும் அம்பாஸிடர் கார் உடனான தங்கள் நினைவுகளை அந்தப் பதிவில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த 1956 முதல் இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறந்த கொண்டிருந்தது அம்பாஸிடர் கார். இந்திய நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கார் என்பதால் இதற்கு தனி மவுசு. அப்போதைய இந்திய சாலைகளில் சுகமாக பயணிக்க இந்த கார் உதவியது. சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் பயணிக்கின்ற காராக அம்பாஸிடர் இருந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் இந்த காரில்தான் பயணித்தனர். அந்த அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் இது.

கால ஓட்டத்தில் சந்தையில் மற்ற நிறுவனங்கள் உடனான போட்டி காரணமாக மெல்ல தனது மவுசை இழந்தது அம்பாஸிடர். கடந்த 2014-ல் இதன் உற்பத்தி முழுவதுமாக நின்றது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் அம்பாஸிடர் கார்களை உற்பத்தி செய்து வந்தது.

இந்தச் சூழலில் திங்கட்கிழமையான இன்று தன் வழக்கமான அலுவல் பணிகளுக்கு நாகாலாந்து மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா திரும்பினார். அதன்போது அவர் அம்பாஸிடர் காரில் பயணிக்க ஆயத்தமாகும் படத்தை பகிர்ந்துள்ளார். “திங்கட்கிழமை. வேலைக்கு செல்ல தயாராவோம். நானும் அம்பாஸிடர் வைத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை ட்விட்டரில் மட்டும் 1.81 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE