பூரி: உலக சுகாதார தினம் மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு பூரி கடற்கரையில் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி இரண்டு மணற் சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.
‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற கருப்பொருளில் இன்றைய உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதே நாளில் கடந்த 1948-ல் உலக சுகாதார அமைப்பு நிறுவப்பட்டது. அந்த அமைப்பின் 75-வது ஆண்டை போற்றும் வகையிலும் மணற் சிற்பம் வடிவமைத்துள்ளார் சுதர்சன் பட்நாயக். கையில் உலக உருண்டையை தாங்கி நிற்கும் பெண் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப்பும் இந்த சிற்பத்தில் இடம் பெற்றுள்ளது.
அதே போல புனித வெள்ளியை முன்னிட்டு ‘அமைதி வேண்டி பிரார்த்திக்கிறேன்’ என்பதை வலியுறுத்தும் விதமாக சிலுவை மற்றும் ஏசுநாதரையும் மணற் சிற்பமாக சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.
முக்கிய தினங்களில் தான் பெற்ற கலையான மணற் சிற்பக் கலையை கொண்டு அந்த தினத்தை போற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் சுதர்சன் பட்நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.