ஓசூர்: திருக்குறள் தெளிவுரை மற்றும் ஒரு லட்சம் தமிழ்ப் பெயர்களுடன் இரு புத்தக தொகுப்புடன் தங்கள் மகனின் திருமண அழைப்பிதழைத் தயாரித்து ஓசூர் தம்பதி வழங்கி வருகின்றனர்.
ஓசூர் பிருந்தாவன் நகர் செவன் ஹில்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்திரன் (61) ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளி. இவரது மனைவி ரெங்கநாயகி (55). இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். அயர்லாந்தில் பணிபுரியும் இவர்களது மகன் முகிலனுக்கு மார்ச் 10-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.
தமிழ் மீது கொண்ட பற்றால் ரவீந்திரன்-ரெங்கநாயகி தம்பதி, தங்கள் மகன் திருமண அழைப்பிதழை திருக்குறள் தெளிவுரை மற்றும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட ஒரு லட்சம் தமிழ்ப் பெயர்களுடன் கூடிய இரு புத்தகமாக (536 பக்கங்கள்) தயார் செய்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
தமிழ் பெயர் சூட்ட வேண்டும்: மேலும், அழைப்பிதழில், ‘திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ் நெறி குடும்பமாக விளங்க நம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர். இத்தம்பதியின் புதிய முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.