திருநெல்வேலி: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த பொறியாளர் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
கூடங்குளம் வடக்கு காமராஜர் நகரை சேர்ந்த செல்வராஜ் - நவரத்தினம் தம்பதியரின் மகன் தாமஸ் பிரபு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடந்த 9 ஆண்டுகளாக ஜப்பானில் உள்ள கார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். பகுதி நேரமாக அங்கு பி எச் டி படித்து வருகிறார். அப்போது அவருக்கும் வியட்நாம் நாட்டை சேர்ந்த பாபாம் துய்டிசுக்வான் என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த 12-ம் தேதி சட்ட விதிகளின்படி ஜப்பானில் ரோமன் கத்தோலிக்க முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து இருவருக்கும் மாப்பிள்ளையின் சொந்த ஊரான கூடங்குளத்தில் வரவேற்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் மாப்பிள்ளையின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.