“இந்த உணவை உங்கள் குடும்பத்தினருக்கு தருவீர்களா?”- ட்விட்டரில் புகார் எழுப்பிய ரயில் பயணி

By செய்திப்பிரிவு

சென்னை: அண்மையில் ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து ட்வீட் செய்திருந்தார். அதில் ஐஆர்சிடிசி-ஐ டேக் செய்திருந்தார் அவர். அந்தப் பதிவு இப்போது பரவலாக கவனம் பெற்றுள்ளது.

‘அந்நியன்’ படத்தில் அம்பியாக வரும் விக்ரம் ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது தான் சந்தித்த சங்கடங்களை ‘டிடிஆர்’ என உரத்த குரலில் அவரை அழைத்து புகார் கொடுப்பார். கிட்டத்தட்ட இதுவும் அதேபோல ஒரு சம்பவம்தான். ஆனால், இந்தப் பயணி டிஜிட்டல் யுகத்தில் இருப்பதால் மிகவும் ஸ்மார்ட்டாக ட்வீட் மூலம் ஐஆர்சிடிசி உட்பட அனைவரது கவனத்திற்கும் எளிதாக இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

“ஒருமுறையேனும் உங்களது உணவை நீங்கள் ருசித்து பார்த்தது உண்டா ஐஆர்சிடிசி? நீங்கள் இதுபோன்ற மோசமான மற்றும் ருசியே இல்லாத ஓர் உணவை உங்கள் குடும்பத்தினருக்கு அல்லது குழந்தைகளுக்கு வழங்குவீர்களா?

சிறைவாசிகளுக்கு கொடுக்கப்படும் உணவை போல இதன் ருசி உள்ளது. நாள்தோறும் டிக்கெட் விலை அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆனால், நீங்களோ உங்களது பயணிகளுக்கு அதே மோசமான உணவைதான் வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

இந்தப் பதிவு எந்தவொரு ஐஆர்சிடிசி ஊழியரையும் குறிப்பிட்டு சொல்வதற்காக பதிந்தது அல்ல. இது அவர்களது தவறும் அல்ல. ஐஆர்சிடிசி உணவை டெலிவரி செய்யும் பணியை மட்டுமே அவர்கள் மேற்கொள்கிறார்கள். உணவு பிரிவு ஊழியர்கள் எங்களது பணத்தை திரும்பக் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், அது அவர்களது தவறு அல்ல” என அந்த பயணி தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டர் கணக்கின் பயனர் பெயர் பூமிகா என உள்ளது. நெட்டிசன்கள் பலரும் அதில் தங்களது ரியாக்‌ஷனை அந்தப் பதிவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வசம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி-யின் ரயில் சேவா ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE