மதுரை சிறை கைதிகளுக்கான வீடியோ, ஆடியோவுடன் கூடிய நூலகத் திட்டம்: தமிழகத்தில் முதன்முறையாக அமல்

By என்.சன்னாசி

மதுரை: தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூசாரி பொறுப்பேற்ற பிறகு, மத்திய சிறைகளில் கைதிகளுக்கான நவீன நேர்காணல் அறை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சிறை கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘சிறை நூலகத் திட்டம்’ ஒன்றை கொண்டு வந்துள்ளார். இதன்படி, மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான நூலகம் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை தனிநபர், அமைப்புகள் மூலம் நன்கொடையாக பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக் கண்ணன் உள்ளிட்ட சிறைத்துறையினர் முயற்சியில் இலக்கியம், கவிதை, நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்களை நன்கொடையாக பெறுகின்றனர். மதுரை கூடல்நகரைச் சேர்ந்த 92 வயது நெசவுத் தொழிலாளி பாலகிருஷ்ணன் என்பவர் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

வழக்கறிஞர்கள், அமைப்பினர், தனி நபர்கள் என தங்களால் முயன்றளவு புத்தகங்களை தொடர்ந்து வழங்குகின்றனர். ஈரோடு பகுதியைச் சேர்ந்த இலஞ்சி சமூக நல அமைப்பைச் சேர்ந்த ஜானகி என்பவர் நேற்று சுமார் 1000 புத்தகங்களை மதுரை சிறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இவரை சிறைத்துறை நிர்வாகம் பாராட்டியது. இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நூலகத் திட்டத்தை தொடர்ந்து அடுத்தக் கட்டமாக கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மத்திய சிறையில், கேபிள் வழியாக ‘ஆடியோ, வீடியோவுடன் ஒளிபரப்பும் நூலகத் திட்டம்’ நேற்று இரவு முதல் தொடங்கியது. இதன்மூலம் பல்வேறு புத்தகங்களின் கதைகளை முழுமையாக விளக்கும் விதத்தில் ஒளி, ஒலி காட்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

சிறைவாசிகள் அவரவர் அறையில் இருந்தபடியே, வீடியோ, ஆடியோ வாயிலாக ஒரு புத்தகம் பற்றிய முழு விளக்கத்தை கதை வடிவிலும், வாசிப்பு நிலையிலும் ஒரே நேரத்தில் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் முழுபுத்தகத்தை படித்து உள்வாங்கிய திருப்தி கிடைக்கும் என சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியது: சிறை நூலகத்தைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் ஒரு புத்தகம் பற்றி அனைத்து கைதிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி, ஒளி வடிவில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 52 டிவிக்கள் (ஆண்கள் பிரிவு ) பெண்கள் சிறையிலுள்ள 4 டிவிக்கள் மூலம் பார்க்க, கேட்க முடியும். நேரத்தை பொறுத்து தினமும் காலை 6.30 முதல் 8, மதியம் 12 முதல் 1.30 மணிவரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, ஆன்மீகம், இலக்கியம், வரலாறு, நீதி போதனை, நன்னெ்றி நூல்கள், கதைகள், நாவல் போன்ற புத்தகங்களை ஆடியோ நூலகம் மூலம் கைதிகளுக்கு கொண்டு செல்வோம்.

மேலும், காலை நேரத்தில் இலக்கியவாதிகள், ஆன்மீகவாதிகள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களின் உரைகளும் வீடியோவுடன் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். கைதிகள் விரும்பும் புத்தகங்கள், நாவல்களும் முழு விளக்கத்துடன் கொண்டு சேர்க்கப்படும். இதுதவிர, நூலகத்திட்டம் மூலம் கைதிகள் விரும்பும் புத்தகங்கள் அவரவர் அறைக்கே கொண்டு சென்று வழங்கிறோம்.

இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் சிவகங்கை புத்தக கண்காட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுமார் 1000 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியிலும் பிரத்யேக ஸ்டால் ஏற்பாடுசெய்து புத்தகங்கள் சேகரிக்கப்படும். புத்தகங்களை நன்கொடையாக வழங்குவோருக்கு வசதியாக அந்தந்த மாவட்ட, கிளை சிறைகளிலும் ஏற்பாடு செய்யப்படும். மதுரை மட்டுமின்றி பாளையங்கோட்டை சிறைக்கும் ஒரு லட்சம் புத்தகங்களை சேகரிக்கிறோம்" இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE