திருப்பூர்: பழநி முருகன் கோயில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ஆகமம் செல்லுபடியாகாது என சொற்பொழிவாளர் சுகி.சிவம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில் திருப்பூரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழா கடந்த 5-ம் தேதி நிறைவடைந்தது. இதில் நிறைவு விழா கருத்தரங்கில் ‘கற்போம் - கற்றபடி நிற்போம்’ எனும் தலைப்பில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துவதன் மூலமாக அறிவு பரவ வேண்டும் என்ற முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மனிதர்கள் வளர்வதற்கு புத்தகங்கள் போல உதவி செய்யக்கூடிய நண்பர்கள் வேறு யாரும் இல்லை. அறிந்திராத உலகத்தை அறிமுகப்படுத்தக்கூடிய வலிமை புத்தகங்களுக்கு உண்டு.
மனிதர்கள் படித்துவிட்டு சிந்திக்கும் விஷயங்கள்தான், வாழ்க்கையை மாற்றி அமைக்கும். பிள்ளைகளின் மீது கருத்துகளை திணிக்காமல் சிந்திக்கும் பழக்கத்தை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு விஷயத்தை யார் சொன்னாலும் கோபம் அடையாமல் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே அதன் உண்மைகளை கண்டுபிடிக்க முடியும்.
பழநி முருகன் கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடைபெறவில்லை என்றும், ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். பழநி கோயில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் முருகன் பெயர் சித்தர்நாதன். தண்டாயுதத்தை ஊன்றி நிற்கும் தண்டபாணி.
கோவணம் கட்டியிருக்கும் துறவி. அவர் ஒரு சித்தர். ஒரு சித்தருக்கு ஆகம பிரதிஷ்டை கிடையாது. தனி மனிதன் ஒரு கோயிலைக்கட்டி பிரதிஷ்டை செய்திருந்தால், ஆகமம் செல்லுபடியாகும். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயிலுக்கு ஆகமம் செல்லுபடியாகாது. இவ்வாறு அவர் பேசினார்.