மதுரையில் ‘ரேபிஸ்’ நோய்க்கு ஓராண்டில் 10 பேர் உயிரிழப்பு: தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி களமிறங்குமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் ரேபிஸ் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மதுரை மாநகராட்சியில் 47 ஆயிரம் தெருநாய்கள் இருந்தன. தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்கக் கூடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வெள்ளக்கல், செல்லூர் ஆகிய 2 இடங்களில் மாநகராட்சி கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன.

மாநகராட்சி சுகாதாரத் துறைப் பணியாளர்கள், தெருநாய்கள் சுற்றித்திரியும் தெருக்கள், சாலை களைக் கண்டறிந்து நாய் களை பிடிக்கின்றனர். பின்னர் அவற்றை கருத்தடை மையங்களுக்குக் கொண்டு சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டு விடுகின்றனர்.

ஆனால், பெரும்பாலான இடங்களில் பணியாளர்கள் தெரு நாய்களைப் பிடிப்பதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், பின்னர் அவர்களே நாய்கள் குழந்தைகளைக் கடிப்பதாக மாநராட்சியிடம் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் எண்ணிக்கையை சுகாதாரத் துறையால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் குறையாமல் தெருநாய்கள் திரிகின்றன. அவை பொதுமக்களை விரட்டிக் கடிக்கின்றன. இதன் காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,000 பேர் நாய்க்கடி சிகிச்சைக்கு வருவதாகக் கூறப்படுகிறது. 2022-ம் ஆணடு மட்டும் 12,804 பேர் நாய்க்கடி சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 10 பேர் ரேபிஸ் தொற்றுள்ள நாய்கள் கடித்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தெருநாய்களை பிடிக்க 100 வார்டுகளுக்கு 2 வாகனங்கள் மட்டுமே உள்ளன. மேலும், அறுவைசிகிச்சைக்கு ஒரு மாநகராட்சி கால்நடை மருத்துவரும், என்ஜிஓ சார்பில் 2 மருத்துவர்களும் உள்ளனர்.

நாய் பிடிக்கும் வாகனம், பணியாளர் பற்றாக்குறையால் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 6 முதல் 12 நாய்களே பிடிக்கப்படுகின்றன. ஒரு வார்டுக்கு மாதத்துக்கு ஒருமுறை நாய் பிடிக்கும் வாகனங்கள் செல்வதே சிரமம். அப்படியே சென்றாலும் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் நாய்களைப் பிடிக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

ஆனால்,மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஏன் தெரு நாய்களைப் பிடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர். நாய் ஒன்றுக்கு கருத்தடை செய்ய ரூ.1,000 செலவாகிறது. இதில் 50 சதவீதம் மாநகராட்சியும், 50 சதவீதம் என்ஜிஓவும் வழங்க வேண்டும். இந்த நிதியும் குறைவாக ஒதுக்குவதால் கருத்தடை பணி பாதிக்கப்படுகிறது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE