அரூர்: தருமபுரி மாவட்ட காராளர் மஹாபாரதம் தெருக்கூத்து மற்றும் பம்பை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு கலை விழா, சங்க அடையாள அட்டை வழங்கும் விழா, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா பாப்பி ரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்டு ரோட்டில் நடந்தது.
சங்க தலைவர் ராமு தலைமை வகித்தார். சங்க செயலாளர் அண்ணாமலை, சங்க நிர்வாகிகள் முருகசாமி, சங்கர், சதீஷ், உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைகள் நலச்சங்க மாநில தலைவர் தங்கவேல், மாநில செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அன்னை பாலன், கவுரவ ஆலோசகர் சிங்காரவேலன் ஆகியோர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை, சான்றிதழ்களை வழங்கிப் பேசினர்.
முன்னதாக, கரகாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து நாடகம், காளியம்மன் ஆட்டம், கோலாட்டம் என கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து இசை நிகழ்ச்சி, தெருக்கூத்து நடந்தது. கலைகளை வளர்க்கும் வகையில் இசைக் கலைஞர் களுக்கு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் கலை அரங்கம் அரசு சார்பில் கட்டித் தர வேண்டும்.
விண்ணப்பித்த கலைஞர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பம்பை இசைக்கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள், தங்களது உபகரணங்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.