திருப்பூர் புத்தக திருவிழா அரங்கில் சிறைவாசிகளுக்கு புத்தகம் வழங்கலாம்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: சிறைவாசிகள் பயன்பெறும் வகையில் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 74-ம் எண் அரங்கில் புத்தகங்களை வழங்கலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறை சார்பில் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில், புத்தகங்களை தானமாக பெற்று சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட சிறை அலுவலர்கள் மூலம் புத்தகம் பெறும் நிகழ்வு நேற்று நடந்தது.

திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட நூலகர் வே.மாதேஸ்வரன், பின்னல் புக் டிரஸ்ட் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் புத்தகங்களை தானமாக வழங்கினர். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.சண்முகசுந்தரம், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.

புத்தக திருவிழா அரங்கம் எண் 74-ல் சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் தர விரும்புவோர் தானம் செய்யலாம். மேலும் புத்தகங்கள் தர விரும்புவோர், கோவை மத்திய சிறை 0422- 2303062, திருப்பூர் மாவட்ட சிறை 0421- 2230311 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என சிறைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE