விழுப்புரம்: தை மாதத்தின் முதல் நாளான இன்று தை பொங்கல் வைத்து இயற்கையின் முதல்வனான சூரியனுக்கு படைத்து, வணங்கி மகிழ்ந்த தமிழர்கள் அடுத்ததாக தங்கள் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட மாடுகளை அழகு படுத்தி, அதற்கு நன்றி கடன் செலுத்துவதுண்டு. இதற்காக பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தின் 2 ம் நாளை உழவுக்கு வலுசேர்க்கும் காளைகளை போற்றுவதோடு, கோமாதாவைப் போற்றுகிற நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அனைத்துத் தெய்வங்களும் பசுவில் வாசம் செய்வதாக ஐதீகம். கிராமங்களில் இன்றைக்கும் விவசாயம் சார்ந்த வீடுகளில், கால்நடைகள் தங்கள் குலச்சாமியாகவே போற்றப்படுகின்றன.
மாட்டுப் பொங்கல் நாளன்று மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, புதிய கயிறுகளை அணிவித்து, மாவிலை தோரணங்களை அதன் கழுத்தில் அணிவித்து, பட்டியில் பொங்கல் வைத்து, இறைவனுக்கு வணங்கிய பின், அந்தப் பொங்கலை மாடுகளை உண்ணவைத்து,
அதன் பின்பே தனக்கான உணவை இன்றளவும் கிராமங்களில் உழவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். நாளைய மாட்டுப் பொங்கலை கொண்டாட விழுப்புரம் மாவட்ட உழவர்கள் நேற்று முதலே மாடுகளுக்கு தேவையான கயிறுகள், மணிகள் வாங்க கடை வீதியில் குவிந்தனர்.