கனவு பலித்ததே... - 15 வயதில் மும்பை மாநகரில் வீடு வாங்கிய சின்னத்திரை நடிகை

By செய்திப்பிரிவு

மும்பை: 15 வயதான சின்னத்திரை நடிகை ருஹானிகா தவான் மும்பை மாநகரில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தனது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளதாகவும் அவர் சொல்லியுள்ளார்.

தனது கையில் வீட்டு சாவி மற்றும் தந்தையுடன் புதிய வீட்டில் இருக்கும் படங்களை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பலருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது பெருங்கனவு. அதுவும் பெருநகரங்களில் வீடு வாங்குவது மிகப்பெரிய கனவு. இந்த சூழலில் ருஹானிகாவை இதற்காக பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

“என் மனசு நிறஞ்சு இருக்கு. எனது சொந்த சம்பாத்தியத்தில் வீடு வாங்க வேண்டும் என கனவு கொண்டிருந்தேன். அது பலித்துள்ளது. அதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். இது எனக்கும், எனது சுற்றத்தாருக்கும் மிகப்பெரியது. இதனை நான் எட்ட எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெற்றோரின் ஆசி மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் நான் இதை எட்டி இருக்க முடியாது.

இன்று என்னால் செய்ய முடிந்தது. உங்களாலும் செய்ய முடியும். கனவு காணுங்கள். அதை பின் தொடருங்கள். ஒருநாள் நிச்சயம் அதை அடைவீர்கள்” என ருஹானிகா தெரிவித்துள்ளார். ‘யே ஹை மொஹப்பதீன்’ எனும் டிராமாவில் இவர் ருஹி என்ற கதாபாத்திரத்திற்காக அறியப்படுகிறார். இந்த வீடு அவரது பெற்றோர் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE