32 மணி நேரம், 1857 கி.மீ... பைக்கில் காசிக்கு பயணம் செய்த தமிழகத் தம்பதியர்!

By செய்திப்பிரிவு

காசி: காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்பதற்காக இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்து அசத்தியுள்ளனர் தமிழகத்தின் ஓசூரை சேர்ந்த ராமலட்சுமி - ராஜன் தம்பதியர். கடந்த ஓராண்டாக இருசக்கர மோட்டார் வாகனத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட இவர்கள் தற்போது நேபாளம் செல்ல திட்டமிட்டனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள காசி தமிழ் சங்கமத்தை காணும் ஆர்வத்துடன் ஓசூரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.

ஓசூரில் இருந்து பயணத்தை தொடங்கி, இடையில் உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் செலவிட்ட நேரத்தையும் சேர்த்து, 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காசிக்கு வந்து சேர்ந்ததாக ரமாலட்சுமி - ராஜன் தம்பதியர் தெரிவித்தனர்.

இந்தப் பயணம் தங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் என்றும். சாதனைப் புத்தகத்தில் பதிவதற்காக அல்ல என்றும் ரமாலட்சுமி கூறினார்.

காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு பற்றி தமிழகத்தில் இருக்கும்போது கூட தங்களால் இவ்வளவு விஷயங்களை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE