இளம் வயது பெண்களையும் பாதிக்கும் மாரடைப்பு: தவிர்ப்பது எப்படி?

By க.சக்திவேல்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அரிதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. உணவு பழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை, உடல் எடை அதிகமாக இருப்பது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதுதவிர, மன அழுத்தம், தூக்கமின்மை, வீட்டில் உள்ள சச்சரவுகள், அலுவலக ரீதியான அழுத்தம், அதிகப்படியான பயம் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

கடந்த வாரம் 30 வயதான இளம்பெண் ஒருவர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற எந்த பாதிப்பும் இல்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் நம்பிராஜன் கூறியதாவது: பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாரடைப்பு வராமல் காப்பாற்றி வரும். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, ஆண்களுக்கு நிகராக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோயுடன் இருக்கும் ஆண் ஒருவருக்கும், சர்க்கரை நோய் இல்லாமல் மாதவிடாய் நின்ற பெண் ஒருவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சமமாக உள்ளது. ஆண்களைவிட பெண்களின் இதய ரத்தக்குழாய் சிறியதாக இருக்கும். ரத்தக் குழாயில் கொழுப்பு அடைத்துக்கொள்வதும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம். மேலும், ரத்தக் குழாயின் உட்சுவரில் ஏற்படும் வெடிப்பு காரணமாகவும் மாரடைப்பு ஏற்படுகிறது.

கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், முன்கூட்டியே நடைபெறும் பிரசவம், வேறு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு நாளடைவில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்பதால், அதிகப்படியான சந்தோஷம், அதிகப்படியான துக்கம் ஆகியவற்றை தாங்கிக்கொள்ள முடியாமல் போகும்போதும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கின்றனர்.

கரோனா காரணமாக இதய ரத்தக்குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும்போது பெண்களுக்கு இதய தசைகள் பலவீனமடைகின்றன. மாரடைப்பு ஏற்பட்டால் ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தவிர்ப்பது எப்படி? - வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி, மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, கொழுப்பு, சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதை குறைப்பது ஆகியவை மாரடைப்பு வராமல் தவிர்க்கும் வழிமுறைகள் ஆகும்.

உடல் பருமனாக இருப்பவர்கள் மற்றும் தாய், தந்தைக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலோ, 30 வயதுக்கு மேல் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி பரிசோதனை ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது. மாரடைப்பை கண்டறியும் ஆஞ்சியோ பரிசோதனை, எக்கோ பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளன. எனவே, அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE