சென்னை: தனது தினசரி சம்பாத்தியத்தை குடில் ஒன்றில் அமர்ந்தபடி நிதானமாக எண்ணி சரிபார்க்கும் மூத்தக் குடிமகன் ஒருவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோ நெட்டிசன்களின் நெஞ்சத்தை உருகச் செய்யும் வகையில் உள்ளது. அதற்கு ஏராளமான லைக்குகளும் குவிந்துள்ளன.
இன்றைய நவீன உலகில் நம்மைச் சுற்றி பல்வேறு கன்டென்டுகள் வலம் வந்து கொண்டுள்ளன. அதில் சிலவற்றை போற போக்கில் அப்படியே கடந்து செல்லும் வகையில் இருக்கும். சில கன்டென்டுகள் சில நிமிடங்கள் நின்று கவனிக்கும் வகையில் இருக்கும். அதில் இரண்டாவது வகைதான் சமூக வலைதளங்களில் உலவும் நெட்டிசன்களின் கவனத்தை பெறும். ‘அது! இது!’ என குறிப்பிட்டு சொல்ல முடியாது. குழந்தையின் அழுகை, சிரிப்பு என அதில் உணர்ச்சிகள் ஊற்றெடுத்து பெருகி வழியில் வகையில் இருக்கும்.
அப்படியொரு வீடியோதான் இப்போது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. சுமார் 18 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்து போன முதியவர் ஒருவர், குடில் ஒன்றில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தபடி தான் அன்றைய தினம் ஈட்டிய வருமானத்தை எண்ணி, சரிபார்க்கிறார். அதுவும் அவரது முகத்தில் உழைத்த களைப்பு கூட நீங்காத நிலையில். அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் அந்த வீடியோவை சுமார் 3.4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 25 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
“நமக்கு கிடைக்கப் பெற்றதை எண்ணி நாம் பாக்கியசாலிகள் என கருத வேண்டும். சிலருக்கு சிறிய அறை, குறைந்த வருமானம் மற்றும் ஒரு ஸ்மார்ட் கேட்ஜெட் கூட ஆடம்பரமானதாக தெரியும். அதற்கு நம் அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்துவது அவசியம்” என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.