புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாய் கூறியுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பட்டய கணக்காளரான அன்னா செபாஸ்டியன் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தான் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம் பணிச்சுமை என அவரது தயார் அனிதா, EY இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“எனது மகள் பள்ளி, கல்லூரியில் நன்றாக படித்தாள். சிஏ தேர்விலும் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றாள். இதுதான் அவளது முதல் பணி. இதில் ஆர்வத்துடன் பணியை தொடங்கினார். ஓய்வின்றி உழைத்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்து முடித்தாள்.
இருப்பினும் நீண்ட நேரம் பணியாற்றியது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை கொடுத்தது. மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவள், ஜூலை மாதம் உயிரிழந்தாள். வேலைக்காக அவளது உயிரையே கொடுப்பாள் என என் குழந்தை அறியவில்லை. குறிப்பாக ஷிப்ட் நேரம் முடியும்போது அவரது மேலாளர் சில பணிகளை கொடுத்து வந்தார். அதனால் ஓவர் டைமாக பணியாற்ற வேண்டிய நிலை. வார விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டி இருந்தது.
» ஜம்மு காஷ்மீர் தேர்தல் | பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குப்பதிவு
» தொழில்நுட்ப கோளாறு: சென்னை - சிங்கப்பூர் விமானம் 8 மணி நேரம் தாமதம்
நாங்கள் வேலையை விடுமாறு தெரிவித்தோம். ஆனால், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவளை தடுத்துவிட்டது. இப்போது அவளே இல்லை. அவளது இறுதிச் சடங்குக்கு அவள் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. எனது மகளைப் போல இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எங்களைப் போன்ற எந்தவொரு ஊழியரின் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது” என அனிதா அதில் தெரிவித்துள்ளார். மகளை இழந்த தாயின் இந்த கடிதம் இணையவெளியில் கவனம் பெற்றுள்ளது.