24 ஆண்டு புகை பழக்கத்தை விட்டவருக்கு குவியும் பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 24 ஆண்டுகால புகைப் பழக்கத்தை கைவிட்டதாக எழுதிய பதிவருக்கு சமூக ஊடகத்தில் பாராட்டும் வாழ்த்தும் குவிந்துள்ளது.

ரோஹித் குல்கர்னி எனும் நபர் தனது சமூக ஊடக பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவு: கடந்த 24 ஆண்டுகளாக தினந்தோறும் 10 சிகரெட்டுகள் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதை நினைத்தாலே பீதியாக உள்ளது. இந்த ஆண்டு ஜென்மாஷ்டமி தினத்தன்று இனிபுகை பிடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். கடந்த 17 நாட்களில் ஒருமுறை கூட சிகரெட்டை தொடவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ஓய்வுபெற்ற ராணுவ தளபதி: புகைப்பழக்கத்தை கைவிட்ட ரோஹித்தை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் பலர் இதுதொடர்பான தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். கருத்து தெரிவித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ராணுவ தளபதி, “கடந்த 1982-லிருந்து 1996 வரை தினமும் சராசரியாக 15-18 சிகரெட்கள் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் ரோஹித். பிறகு 1996 ஜனவரி 4-ம் தேதி எனது சிகரெட் பாக்கெட்டை கசக்கித் தூற எறிந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை கடந்த 20ஆண்டுகளில் ஒரு சிகரெட்டைக்கூட தொட்டதில்லை. துணிந்திருங்கள். ஒருநாள் ஒருமுறை சண்டையிட்டுப் பாருங்கள். 2 மாதங்களில் புகைபிடிக்கும் வேட்கைமறைந்துவிடும்” இவ்வாறு அவர் பின்னூட்டம் இட்டிருந்தார். இதுவரை 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் ரோஹித் குல்கர்னியின் பதிவை கண்டுள்ளனர், அவர்களில் 19 ஆயிரம் பேர் விருப்பக்குறி இட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE