கோவை: ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததைஒரே ஒரு புகைப்படத்தால் புரிய வைக்கமுடியும். குறிப்பாக, காட்டுயிர் புகைப்படக்கலை (வைல்ட் லைப் போட்டோகிராஃபி) என்பது உலகளவில் பிரபலமான ஒன்றாகிவிட்டது. இந்தியாவில் காட்டுயிர் புகைப்படக்கலை என்பது நூற்றுக்கணக்கானவர்களின் பொழுதுபோக்காகவும், முழு நேரத் தொழிலாகவும் மாறியுள்ளது.
காட்டுயிர்களை பொருத்தவரை டிஸ்கவரி, அனிமல் பிளானட், நேஷனல் ஜியாகிரஃபிக் சேனல்களில் வன உயிரினங்களின் வாழ்வியலை படமாக்கி காண்பிக்கும் டாக்குமென்ட்டரி காட்சிகள் பிரமிப்பையும், இயற்கை அழகை ரசிக்க வைப்பதாகவும் இருக்கின்றன.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தபிரகலாத் விக்ரம் என்ற 16 வயது சிறுவன், 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து காட்டுயிர்களை தனது கேமராவில் புகைப்படமாகப் பதிவு செய்து வருகிறார். இவர் தனது 11 வயதில் ஆசியாவின் மிகப்பெரிய காட்டுயிர் புகைப்படக்கலை போட்டியில் பங்கேற்று விருதும் பெற்றுள்ளார்.
அவர் கூறியதாவது: எனது தந்தை விக்ரம் வன உயிரின ஆர்வலர். தொழில்முறை புகைப்படக் கலைஞர். பள்ளி விடுமுறையில் அதிகளவில் புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம். எனது தந்தைக்கு காட்டுயிர்களை புகைப்படம்எடுப்பதில் ஆர்வம் அதிகம்.
» தொடர் கனமழை - ‘கூலி’ படப்பிடிப்பு பாதிப்பு
» இந்தியாவில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இதனால் தந்தையுடன் சேர்ந்து நானும் 7 வயதுமுதல் கேமராவில் காட்டுயிர்களை புகைப்படமாக எடுக்க ஆரம்பித்தேன். முதலில்விளையாட்டாக புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். பின்னர் காட்டுயிர்களை புகைப்படம்எடுப்பது விருப்பத்துக்குரியதாக மாறிவிட்டது.நான் பள்ளியில் படித்துக்கொண்டே உலகெங்கும் பயணம் செய்து காட்டுயிர்களை புகைப்படமாக எடுத்து வருகிறேன்.
இப்போது திறந்தநிலை பள்ளியில் 11-ம் வகுப்பில் படித்து வருகிறேன். கடந்த 2019-ல் பெங்களூருவில் நடைபெற்ற ஆசியாவின் மிகப்பெரிய காட்டுயிர் புகைப்பட போட்டியில், நான் எடுத்த இந்தோனேசிய குகையில் இருந்த வெளவால்களின் புகைப்படத்திற்கு இளவயது பிரிவில் சிறந்த புகைப்பட விருது கிடைத்தது.
இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவுக்கு அடிக்கடி பயணம் செய்து புலி, யானை உட்பட பல வன உயிரினங்களை புகைப்படம் எடுத்துள்ளேன். தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அடிக்கடி சென்று வன உயிரினங்களை புகைப்படம் எடுத்துள்ளேன்.
அண்மையில் கிழக்கு ரஷ்யாவுக்கு சென்று சாலமன் வகை மீன்களை இரையாக உட்கொள்ளும் பழுப்பு நிற கரடிகளை புகைப்படம் எடுக்கச் சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. சிறியது முதல் பெரிய அளவிலான பழுப்பு நிற கரடிகளை அருகிலேயே பார்த்து புகைப்படம் எடுத்தேன்.
ஆப்பிரிக்க காடுகளில் சிங்கம், யானை, சிவிங்கி புலி (சீட்டா) ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளேன். இந்தியக் காடுகளில் புலி, யானை, செந்நாய், இருவாச்சி பறவை, சிறுத்தை என பல்வேறு வன உயிரினங்களை புகைப்படம் எடுத்துள்ளேன். சில நேரங்களில் யானை துரத்திய திகில் அனுபவமும் உண்டு.
எனக்கு மற்றவர்களை விட வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உள்ளது. அதன்படி காட்டுயிர் புகைப்படங்களை வித்தியாசமாக எடுத்து வருகிறேன். சர்வதேச காட்டுயிர் புகைப்படபோட்டியில் பங்கேற்க புகைப்படங்களை அனுப்பி வருகிறேன்.
சில புகைப்படங்கள் இறுதிச்சுற்று வரை வந்துள்ளன. சில சர்வதேசபோட்டிகளின் முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.காட்டுயிர் புகைப்படக்கலை என் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது. சர்வதேச போட்டிகளில் அதிக விருதுகளை வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
காட்டில் சந்தித்த சவால்கள்: காட்டுயிர்களை புகைப்படம் எடுக்கும் போது குறிப்பிட்ட வன உயிரினங்களுக்கும், நமக்கும் இடையே குறிப்பிட்ட தூர அளவை பின்பற்ற வேண்டும். வன உயிரினங்களை தொந்தரவு செய்யக்கூடாது. யானை அல்லது பிற வன உயிரினங்கள் துரத்த முற்படுவதற்கு முன் எச்சரிக்கை செய்யும்.
அப்போது நாம் அங்கிருந்து பாதுகாப்பாகச் சென்றுவிட வேண்டும். அதேபோல மழை பெய்யும்போது புகைப்பட உபகரணங்களை பாதுகாக்க வேண்டும். மழை பெய்யும் சமயங்களில் வன உயிரினங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு புகைப்படம் எடுக்க செல்ல வேண்டும். ஆப்பிரிக்கா மற்றும் இந்திய காடுகளில் யானை துரத்தியுள்ளது.
ஆனால், ஜீப் போன்ற வாகனங்களில் இருந்து புகைப்படம் எடுப்பதால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. ரஷ்யாவில் பழுப்பு நிற கரடியை சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்து புகைப்படம் எடுத்தேன். அதுபோல காலை தொடங்கி மாலை வரை காடுகளில் காத்திருந்து புகைப்படம் எடுத்துள்ளேன். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் சுமார் 5 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரை நடந்து புகைப்படம் எடுத்த அனுபவமும் உண்டு.