ஏழை மாற்றுத்திறனாளியை போர்ஷ் காரில் அழைத்து சென்ற யூடியூபர்: இதயப்பூர்வமாக பாராட்டிய இணையவாசிகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யூடியூபில் மக்களிடம் செல்வாக்குசெலுத்தக்கூடிய நபரை இன்ப்ளூயன்சர் என்று அழைக்கின்றனர். அந்த வகையில் ஏழைகளுக்கு உதவுவதை ஆண்டு முழுவதும் குறிக்கோளாக கொண்டு ஒவ்வொரு நாளும் கடைக்கோடியில் உள்ள ஏதோவொரு மனிதருக்கு உதவுவதை சீனு மாலிக் தனது வாழ்நாள் லட்சியமாக கடைப்பிடித்து வருகிறார். நாள் 221/365-ல் அவர் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ஆடம்பரமான மஞ்சள் நிற போர்ஷ் காரை பார்த்தமாற்றுத்திறனாளி ஒருவர் அதன்முன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால், அதற்குள் அந்தகாரின் உரிமையாளர் வந்து ‘என்னசெய்கிறீர்கள்' என்று கேள்வியெழுப்பு கிறார். இதனைப் பார்த்து பயந்த மாற்றுத்திறனாளி புகைப்படம் எடுத்ததற்காக காரின் உரிமையாளர்தன்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில் ஓடுகிறார். அவரை துரத்திச் சென்றகாரின் உரிமையாளர் மாற்றுத்திறனாளியின் மொபைல் போனை பறித்துஅதில் உள்ள படங்களை பார்க்கிறார்.எடுத்த படங்களை அழித்துவிட்டு தன்னையும் தாக்குவார் என்ற பயம்அவரின் முகத்தில் நிறைந்திருந்தது.ஆனால், அவர் நினைத்தற்குமாறாக மாற்றுத்திறனாளியை கூட்டிச்சென்று காரின் அருகே, உள்ளே எனபல கோணங்களில் உட்கார வைத்து உரிமையாளரே புகைப்படம் எடுத்து அவரிடம் கொடுக்கிறார்.

அதன் பின்னர் அந்த ஏழை மாற்றுத்திறனாளியின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக காரில் உட்காரவைத்து ஜாலி ரவுண்ட் செல்கிறார் அந்த உரிமையாளர். அப்போது, எல்லையில்லா ஆனந்தத்தை அந்த மாற்றுத்திறனாளி சின்ன குழந்தைப் போல கைதட்டல் மூலம் வெளிப்படுத்துவதை பார்த்த உரிமையாளரின் கண்கள் அவரையும் அறியாமல் பனித்து விடுகிறது. ஏழையின் ஆனந்தத்தில் இறைவனை பார்த்துவிட்டாரோ என்னவோ.

இந்த காட்சி சமூக வலைதள பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் உரிமையாளரின் கருணை உள்ளத்தை பலரும் இதயப்பூர்வமாக பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE