மதுரையில் ஏழை மாணவர்களுக்கு இலவச தடகள பயிற்சி அளிக்கும் தலைமைக் காவலர் சந்துரு!

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் விளையாட்டில் ஆர்வமுள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச தடகள பயிற்சி அளித்து வருகிறார் ஆயுதப்படை தலைமைக் காவலர் சந்துரு. இம்மாணவர்களை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற செய்வதே தன்னுடைய நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

நல்ல சமுதாயத்தை உருவாக்குதல், விளையாட்டில் ஆர்வமுள்ள ஏழை மாணவ, மாணவிகளை மாவட்ட, மாநில, தேசிய தடகள போட்டியில் பங்கேற்க செய்து, பதக்கங்களை பெற வைக்கும் நோக்கில் மதுரையில் இலவச பயிற்சியை தொடர்ந்து நடத்துகிறார் மதுரை மாவட்ட ஆயுதப்படை தலைமைக் காவலர் சந்துரு (முதல் நிலை பயிற்சியாளர்). இதற்காக அவர் ‘ஏஆர்ஏசி இலவச ஸ்போர்ட்ஸ் அகாடமி ’-யை ஆரம்பித்து அதன்மூலம் பயிற்சி அளிக்கிறார். இவரிடம் 150க்கும் மேற்பட்ட காவலர் குழந்தைகளும், 70-க்கும் மேற்பட்ட ஏழை ,எளிய மாணவ, மாணவிகளுக்கும் தொடர்ந்து தடகள பயிற்சி பெறுகின்றனர்.

தற்போது, இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறையையொட்டி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 1ம் தேதி சுமார் 60 நாட்கள் இலவச தடகள பயிற்சியை அளிக்கிறார். பயிற்சியின் போது, மாலையில் சுண்டல், பயறு, பழ வகைகள் வழங்கப்படுகிறது. தனது காவல் பணி, குடும்பச் சூழலுக்கு இடையிலும் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி விளையாட்டில் ஆர்வ முள்ளவர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற நோக் கில் இப்பணியை தொடர்ந்து செய்வதாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள எனக்கு முறையாக பயிற்சி பெறும் வசதி இல்லை. ஆனாலும், ஒரு வழியாக தடகளத்தில் போதிய பயிற்சியைக் கற்றுக் கொண்டு ஒரு இடத்தை பிடித்த நிலையில், நம்மால் முடிந்தளவு ஏழை மாணவ, மாணவிகள் மற்றும் காவல் துறையைச் சார்ந்த பிள்ளைகளுக்கு பயற்சி அளிக்கிறேன்.

மதுரை காவல் ஆணையர், தென் மண்டல ஐஜி, டிஐஜி, மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தடகளச்சங்கம் வழிகாட்டுதலின்படி, கோடை கால சிறப்பு தடகள பயிற்சியை அளிக்கிறேன். இதன் மூலம் மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை மேலோங்குகிறது. சமூக பொறுப்பும் வளர்கிறது. முறையான உடற் பயிற்சியால் உடல் ஆரோக்கியம் சிறக்கிறது.

மாணவ ,மாணவிகள் தங்களது உடல் , மனரீதியான பாதிப்பிலிருந்து வெளியே வரலாம். எனது முக்கிய நோக்கம், இலக்கு எல்லாமே ஏழை மாணவ, மாணவிகள் மாவட்ட, மாநிலம், தேசிய போட்டிகளில் பங்கேற்க வேண்டும். என்னிடம் பயிற்சி பெற்ற பெண் காவலர் ஒருவரின் மகள் பமிலவர்தனி என்பவர் தேசிய தடகள போட்டியில் பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமை. இவரை போன்று என்னிடம் பயிற்சி பெறுவோரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்லவேண்டும் என்பதே எனது ஆசை’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE