தமிழ் முறைப்படி தென்கொரிய இளைஞரை மணந்த பெண் பொறியியல் பட்டதாரி @ கரூர்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகே பெண் பொறியியல் பட்டதாரி ஒருவர் தமிழ்முறைப்படி தென்கொரிய இளைஞரை திருமணம் செய்துக் கொண்டார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த நடையனூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டதாரி. இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஆங்கிலம் மற்றும் கொரிய மொழி தெரியும் என்பதால் இணையத்தளத்தில் அவரது தொழில் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

அப்போது தென்கொரிய நாட்டின் டோங்யோங் பகுதியைச் சேர்ந்த மின்ஜுன்கிம் (28) உடன் இணையதளம் மூலம் பேசி பழகியுள்ளார். இவர் கிஸ்ட் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். மேலம் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஒராண்டுக்கு மேலாக இருவரும் இணையத்தில் பேசிய பழகிய நிலையில் அது காதலாக மாறியது. இதையடுத்து விஜயலட்சுமி கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவுக்கு நேரில் சென்று மின்ஜுன்கிம் மற்றும் அவரது குடும்பத்தைச் சந்தித்தார். இதையடுத்து மின்ஜுன்கிம் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

பெண் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருமணத்தை தமிழ் முறைப்படி பெண் வீட்டில் நடத்த முடிவு செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். மே 19ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்து திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து மின்ஜுன்கிம்மின் பெற்றோர், நண்பர்கள் என 4 பேர் கடந்த வாரம் நடையனூர் வந்தனர். கோம்புபாளையம் பெருமாள் கோயிலில் இன்று (மே 19ம் தேதி) மின்ஜுன்கிம் தமிழ் முறைப்படி பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து உறவினர்கள் முன்னிலையில் விஜயலட்சுமியை தாலிக்கட்டி திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தில் பங்கேற்ற பெண்ணின் உறவினர்கள் தென்கொரிய மாப்பிள்ளைய ஆச்சரியாக பார்த்து சென்றனர்.

முன்னதாக, நடையனூரில் உள்ள மண்டபத்தில் நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகள் குழந்தைகளுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினர். திருமணம் முடிவடைந்ததை அடுத்து கணவர் மின்ஜுன்கிம்முடன் விஜயலட்சுமி தென்கொரியா செல்ல உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE