‘இங்கு போதைக்கு வேலையில்லை’ - ஒரத்தநாடு அருகே இளைஞர்கள் சுவாரஸ்ய போஸ்டர்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஊருக்குள் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க புரட்சிகர முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது பொன்னப்பூர் கிழக்கு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.

அவர்களின் இந்த முடிவின்படி பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் துணை போனாலோ அது இந்தக் கிராமத்துக்கு நீங்கள் செய்யும் துரோகம். பல குடும்பங்களின் பாவ செயலில் ஈடுபடாதீர்கள் என போஸ்டர் அடித்து பேருந்து நிறுத்தம், மளிகை கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.

அத்துடன் மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக, வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுாரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள் இந்த கிராமத்து இளைஞர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “இளைஞர்கள் ஒன்றிணைந்து எங்கள் கிராமத்துக்குள் போதைப்பொருள் விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்வது என முடிவு செய்துள்ளோம். இந்த முடிவுக்கு இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் நூறு சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.

கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் எங்கள் கிராமம் மிகவும் பின் தங்கி உள்ளதுக்கு போதைப் பொருள் பயன்பாடு தான் காரணம். ஆகவே எங்கள் ஊரின் ஒட்டுமொத்த நலனுக்காக போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது விற்கக் கூடாது என முடிவெடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE