சென்னை: பிளாஸ்டிக் விசில் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து கழக பேருந்து நடத்துநர்களுக்கு சுமார் 8,000 உலோக விசில்களை வழங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது நடத்துநர்களுக்கு சிஎஸ்கே வழங்கும் அன்புப் பரிசு என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேருந்து பயணம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயணம் என இரண்டையும் இணைப்பது விசில்கள் தான். அந்த வகையில் பிளாஸ்டிக் விசில்களுக்கு மாற்றாக உலோகத்தினால் செய்யப்பட்ட விசில்களை நடத்துநர்களுக்கு வழங்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துடன் கைகோர்த்துள்ளது சிஎஸ்கே.
சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனில் போட்டி நடைபெறும் நாளன்று ஆட்டம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் மேட்ச் டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள், ஏசி வசதி இல்லாத பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கலாம். இதற்கு மேட்ச் டிக்கெட் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. ருதுராஜ் தலைமையிலான அணி வரும் வெள்ளிக்கிழமை அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அடுத்த லீக் போட்டியில் விளையாட உள்ளது.
தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவது அடுத்த சுற்றுக்கு முன்னேற சிஎஸ்கே அணிக்கு பெரிதும் உதவும்.