உடுமலை: உடுமலையில் தனியார் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரை, சாரட் வண்டியில் முன்னாள் மாணவர்கள் அழைத்துச் சென்று கவுரவப்படுத்தினர்.
உடுமலை- பொள்ளாச்சி சாலையில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு, 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், கடந்த 31 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்பரசு. இவரது பணிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
இவரிடம் கடந்த 20 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் குழுவாக இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா நிறைவில் ஆசிரியர் அன்பரசுவை பெருமைப்படுத்தும் வகையில், பள்ளியில் இருந்து அவரின் வீடு வரை அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அழைத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சி ஆசிரியர்கள், மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது