ராமநாதபுரம்: ஐந்து தலைமுறையைக் கண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூறு வயதான மூதாட்டி பாப்பம்மாளுக்கு அவரது பேரன், பேத்திகள் சார்பில் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் காளிகாதேவி அம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பாப்பம்மாள். இவர் 1924-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு 6 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களை நன்கு படிக்க வைத்து திருமணமும் முடிந்து பல ஊர்களில் வசித்து வருகின்றனர்.
நூறு வயது: தற்போது ஐந்து தலை முறைகளை கண்டதோடு, 50-க்கும் மேற்பட்ட பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்திகளோடு இவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பல்வேறு ஊர்களில் வசிக்கும் மகன், மகள், பேரன், பேத்திகள், மூதாட்டி பாப்பம்மாள் நூறு வயதை கடந்ததை கொண்டாடும் வகையில், பிறந்த நாள் விழா கொண்டாட முடிவு செய்தனர்.
இதையொட்டி அனைவரும் ராமநாதபுரத்தில் மூதாட்டி பாப்பம்மாள் வீட்டுக்கு வந்தனர். அவருக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தடபுடலாய் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.