திருப்பாச்சேத்தி அருகே வைகை ஆற்று கால்வாயில் இரவு பகலாக மீன் பிடிக்கும் விவசாய குடும்பம்!

By பி.டி.ரவிச்சந்திரன்


திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருகே வைகை ஆற்றுக் கால்வாய் பகுதியில் குடிசை அமைத்து இரவு பகலாக விவசாயக் குடும்பம் மீன் பிடித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பன் (58). இவர் வைகை ஆற்றில் குறைவான தண்ணீர் செல்லும் நேரங்களில் குடும்பத்தோடு சேர்ந்து மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.

தற்போது, விவசாயி கருப்பன் அன்னியனேந்தல் பகுதியில் வைகை ஆற்றின் அருகே குடிசை அமைத்து குடும்பத்தோடு இரவு பகலாக மீன்பிடித்து வருகிறார். ஆற்றிலிருந்து கட்டிக்குளம் கால்வாய் பிரியும் இடத்தில் பத்தக்கட்டை அமைத்தும், வலை வீசியும் மீன்களை பிடிக்கின்றனர்.

இதுகுறித்து கருப்பன் கூறுகையில், காலையில் கெண்டை, அயிரை போன்ற சிறிய மீன்கள் கிடைக்கும். இரவில் விரால் போன்ற பெரிய மீன்கள் கிடைக்கும். வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் சமயங்களில் மீன் பிடிப்பது எங்கள் குடும்பத்துக்கு வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி மீன் பிடித்து வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE