நாட்டில் 11% பேருக்கு மனநல பாதிப்பு: மாணவர்கள் அதிகம் என மனநல நிபுணர் கவலை

By செய்திப்பிரிவு

மதுரை: நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 10.6 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மாணவர்கள் தான் மிகப் பெரிய அளவில் மன அழுத்தத்துக்கும், மனசோர்வுக்கும் ஆளாகியுள்ளனர், என்று மனநல மருத்துவ நிபுணர் சி.ராம சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி, செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹெச்சிஎல் நிறுவனம் இணைந்து, மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மனநலம் குறித்து தலைமைப் பயிற்சி அளிக்கும் கருத்தரங்கை மாட்டுத்தாவணியில் நடத்தின.

மண்டலத் தலைவர் வாசுகி, மாநகராட்சிப் பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மாரிமுத்து, எம்.எஸ். செல்ல முத்து அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆர்.ராஜகுமாரி, ஹெச்சிஎல் பவுண்டேஷன் நிறுவன இணை மேலாளர் பி.பிரபாகர் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மேயர் இந்திராணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.

எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 10.6 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள்தான் மிகப்பெரிய அளவில் மன அழுத்தத்துக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகியுள்ளனர். அந்த கவலையை மறப்பதற்கு அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்த அவல நிலையை போக்கவே ஹெச்.சி.எல் நிறுவனத்தின் உதவியுடன், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டத்தில், மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்களையும், போதைப் பொருட்களுக்கு அடிமையான மாணவர்களையும் கண்டறிந்து மனநல ஆலோசனை வழங்குகிறோம். மேலும், ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளித்து, அவர்களையும் இந்த திட்டத்தில் உளவியல் நிபுணர்களாக உருவாக்கு கிறோம்.

இந்த திட்டம் தொடங்கிய 4 ஆண்டுகளில் மதுரையில் உள்ள 24 மாநகராட்சிப் பள்ளிகளில் 13 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளோம். இதில், குறிப்பாக 80 சதவீத மாணவிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE