ODI WC 2023 | “இந்த முறை கோப்பையை எங்கள் அணி வெல்லும்” - நியூஸிலாந்து ரசிகர்!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தங்கள் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என நியூஸிலாந்து நாட்டு ரசிகர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையிலான போட்டிக்கு பிறகு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 282 ரன்கள் குவித்தது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இடையே அமைந்த அபார கூட்டணி அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், சோதி, சவுதி, பெர்குசன் ஆகியோர் விளையாடவில்லை. அந்த அணி அடுத்த மூன்று போட்டிகளில் நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதனால் காயத்தில் இருந்து குணம் பெற்றுள்ள வீரர்கள், போட்டியில் விளையாட நேரம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை இந்த வெற்றி வழங்கியுள்ளது.

“நியூஸிலாந்து அணி இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விதம் எனக்கு ஆச்சரியம் தந்தது. உலகக் கோப்பை தொடாரில் இது நல்ல தொடக்கம். இந்த முறை கோப்பையை எங்கள் அணி வெல்லும். இதே அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்” என நியூஸிலாந்து நாட்டில் இருந்து வந்துள்ள ரசிகர் தெரிவித்துள்ளார். அவர் நியூஸிலாந்து அணி விளையாடும் முதல் 6 போட்டிகளை பார்க்க திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE