அரசு மருத்துவமனைகளில் நாய்கடி சிகிச்சைக்கு குவியும் மக்கள் | உலக 'ரேபிஸ்' தின பகிர்வு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: நாய்களுக்கு கருத்தடை செய்வது சவாலாக இருப்பதால் கிராமங்கள், நகரங்கள் வேறுபாடின்றி தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. நாய்களை கையாளுவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆரம்வம் காட்டுவதில்லை.

தெரு நாய்கள் அதிகரிப்பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் கடித்து பாதிக்கப்படுகின்றனர். அதனால், தமிழகத்தில் நாய் கடிக்கு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. சத்தமில்லாமல் ரேபிஸ் (Rabies) உயிரிழப்பும் அதிகரிக்கிறது.

மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,000 பேர் நாய் கடித்து சிகிச்சைக்கு வருகின்றனர். 2022-ம் ஆண்டில் மட்டும் மதுரை அரசு மருத்துவமனையில் 12,804 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 10 பேர் ரேபிஸ் தொற்றுள்ள நாய்கள் கடித்து சிகிச்சை பலனன்றி இறந்துள்ளனர்.

வெறி நாய் கடியால் வரக்கூடிய ‘ரேபிஸ்’ குணப்படுத்த முடியாத நோய் என்ற நிலை உள்ளது. ஆனால், இந்த நோய் வராமல் தடுக்க முடியும். ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட வெறி நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, வவ்வால் போன்ற பாலூட்டி விலங்குகள் கடிப்பதன் மூலம் நேரடியாக மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் கடித்த 48 மணி நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததால்
மதுரை செல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட்டமாகத் திரியும் நாய்கள்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ரேபிஸை தடுக்க தெரு நாய்களுக்கு 90 சதவீதம் கருத்தடை செய்தால் மட்டுமே அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால், மதுரை மாநகராட்சியில் மாதந்தோறும் 300 தெரு நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்ய வசதி உள்ளதால் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது.

தெரு நாய்கள் மட்டுமில்லாது வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டால் (anti-rabies vaccine-ARV) மட்டுமே இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும். தற்போது கால்நடைத் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ரேபிஸ் தடுப்பூசி முகாமை ஊக்குவித்து வருகின்றன. ரேபிஸ் தடுப்பூசியின் அவசியத்தையும், வீடுகளில் வளர்ப்பு நாய்கள் வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

ஜி.சிவக்குமார்

இது குறித்து கால்நடைத் துறை அரசு மருத்துவர் ஜி.சிவக்குமார் கூறியது: ரேபிஸ் உயிரிழப்பைத் தடுக்க வீட்டு விலங்குகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். வீட்டு விலங்குகள் குழந்தைகளைத் தாக்கினாலோ, கடித்தாலோ நமக்குத் தெரிவிக்க பழக்கப்படுத்த வேண்டும்.

நாய்கள், மனிதர்களை மட்டுமில்லாது ஆடு, மாடுகளையும் கடிக்கின்றன. மாட்டின் மண்டையை நாய் கடித்தால் மாடு இறந்துவிடும். ஆடு, மாடுகளை வெறி நாய் கடித்தால் அதனிடம் இருந்து அதைப் பராமரிக்கும் மனிதர்களுக்கும் பரவுகிறது.

நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் இறப்பு விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி. வீட்டு விலங்குகளுக்கு உரிய காலத்தில் ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கு முதல் 3 மாதத்தில் ஒரு தடுப்பூசியும், நகர்ப்புறமாக இருந்தால் 6 மாதத்தில் ஒரு தடுப்பூசியும், கிராமங்களாக இருந்தால் ஓராண்டுக்குப் பிறகு மற்றொரு தடுப்பூசியும் போட வேண்டும். அதன்பிறகு ஆண்டுதோறும் தடுப்பூசி போட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ரேபிஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழப்பதால் ரேபிஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைக் காக்க உலக முழுவதும் செப். 28-ம் தேதி ‘சர்வதேச ரேபிஸ் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் ரேபிஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினமாகும், என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE