‘ஜெயிலர்’ விநாயகர் பராக்... - உடுமலை இளைஞர் அசத்தல்

By எம்.நாகராஜன்

உடுமலை: ஜெயிலர், லால் சலாம் படங்களில் வரும் ரஜினியின் தோற்றத்தைப்போல உடுமலை அருகே களி மண்ணால் விநாயகர் சிலைகளை உருவாக்கி இளைஞர் அசத்தியுள்ளார். உடுமலை அடுத்துள்ள பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28). மண்பாண்டத் தொழிலாளி. நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர், அண்மையில் 1980-களில் ரஜினியின் ஸ்டைலை நினைவுகூரும்விதமாக 2 அடி உயர சிலையை உருவாக்கி, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஜெயிலர், லால்சலாம் திரைப்படங்களில் வரும் ரஜினியின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, களிமண்ணால் விநாயகர் சிலைகளை ரஞ்சித்குமார் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து ரஞ்சித்குமார் கூறியதாவது: என்னுடைய 12 வயதில் ரஜினியின் உருவத்தை களிமண்ணில் செய்து பழகினேன். பின், திரைப்படங்களில் ரஜினியின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, களிமண் சிலைகளாக செய்துள்ளேன். தற்போது ஜெயிலர், லால்சலாம் படங்களில்வரும் ரஜினியின் கதாபாத்திரங்கள்போல, விநாயகர் சிலைகளை களிமண்ணால் உருவாக்கியுள்ளேன்.

இந்த சிலைகளை 2 நாட்களில் செய்து முடித்தேன். இதைநேரிலும், சமூக வலைதளங்களிலும் கண்ட பலரும் பாராட்டியுள்ளனர். இதுதவிர ஆர்டரின் பேரில் தடியுடன் கூடிய காந்தி சிலை, செங்கோலுடன் கூடிய பிரதமர் மோடி சிலை ஆகியவற்றையும் செய்துள்ளேன். ஒரு நிகழ்ச்சிக்காக பூளவாடி வந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என்னை நேரில் அழைத்து பாராட்டினார். களி மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். கதர் கிராம தொழில் வாரியம் மூலம் எவ்வித நிவாரண உதவியும் அளிக்கப்

படுவதில்லை. மழைக்காலத்தில் தொழில் முடங்குவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில் அரசு எங்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும். நடிகர் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE