‘மன அழுத்தமா..? கவலை வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்!’ - மதுரையில் 3 ஆண்டுகளாக செயல்படும் அமைப்பு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: குடும்பத் தகராறு, பொருளாதார இழப்பால் மன அழுத்தம், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, நோயால் பதற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால், அவர்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத சூழலில் தற்கொலை மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மனக்கொந்தளிப்பில் சில நிமிடங்களில் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறது. கரோனா தொற்று காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டோர், வேலை இழந்தோர், பொருளாதார இழப்புகளை சந்தித்தோர் பலர் தற்கொலை செய்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்த 2020-ம் ஆண்டு மதுரை எம்எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘ஸ்பீக் 2 அஸ்’ என்ற டெலி-கால் மனநல உதவி மைய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் தன்னார்வலர்கள் தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்று அவர்களின் பிரச்சினைகளை பரிவுடன் கேட்பர். பின்னர் அதில் இருந்து மீள உரிய ஆலோசனைகளை வழங்குவர்.

தனிமையில் வாடுவோர், குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேச முடியாதோர் ‘ஸ்பீக் 2 அஸ்’ உதவி மையத்தை அணுகி பலன் பெற்று வருகிறார்கள். சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்படும் இந்த ‘ஸ்பீக்2அஸ்’ மன நல உதவி எண் 93754 93754-ஐ தொடர்பு கொண்டு பலர் தங்கள் பிரச்சினைகளை கூறி தீர்வு பெறுகிறார்கள்.

இந்த உதவி மையத்தில் பேசும் நபர்களின் விவரம் ரகசியம் காக்கப்படுகிறது. இந்த மையத்தில் ஆலோசனை கூறுவதோடு சரி. அதன்பிறகு பேசும் நபர்களின் எண்களுக்கு போன் செய்வதில்லை. அவர்களே விரும்பி அழைத்தால் மட்டும் மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவ உதவி தேவைப்படுவோரை மருத்துவர்களிடம் செல்ல வழிகாட்டுகிறார்கள்.

இதில் தன்னார்வலர்களாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், உளவியலாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், பணிபுரியும் பெண்கள், எச்சிஎல் தன்னார்வலர்கள் உட்பட 67 பேர் உள்ளனர். இவர்களுக்கு மனநோய், ஆலோசனை வழங்கி ஆற்றுப்படுத்துதல் பயிற்சி வழங்கிய பிறகே இந்த சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.

சி.ராமசுப்பிரமணியன்

இதுகுறித்து எம்எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் சி.ராமசுப்பிரமணியன் கூறியதாவது: மன அழுத்தத்தில் தவிப்போர், தற்கொலை எண்ணம் கொண்டோரின் துயரங்களை காது கொடுத்துக் கேட்கவும், அவர்களின் மன நலத்தை மேம்படுத்தவும் ‘ஸ்பீக் 2 அஸ்’ தொடங்கப்பட்டது. இந்த ஹெல்ப் லைன் முயற்சியில் எச்சிஎல் நிறுவனம், நீட்ஸ் இந்தியா பெங்களூரு போன்றவை செல்லமுத்து அறக்கட்டளையின் பங்குதாரராக உள்ளன, என்றார்.

‘ஸ்பீக் 2 அஸ்’ தன்னார்வலர் ஸ்ரீவித்யா கூறியதாவது: தற்கொலை என்பது கடுமையான பொது சுகாதார, உடல்நலப் பிரச்சினை. உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒவ்வொரு தற்கொலையிலும் அவர் மட்டுமின்றி அவரைச் சார்ந்த 135 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

2019-ம் ஆண்டில் 77 சதவீதத்துக்கும் அதிகமான உலகளாவிய தற்கொலைகள் வளரும் நாடுகளில்தான் நிகழ்ந்தன. இந்தியாவில் 2011-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த மரணங்கள், 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்கொலை எண்ணம் கொண்டோர் 10 நிமிடங்கள் தள்ளிப் போட்டாலே போதும். அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி வழிகாட்டுகிறோம்.

மனநலமும் மருத்துவம் சார்ந்தது என்ற விழிப்புணர்வு பலரிடம் இல்லை. பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் மனநலம் சார்ந்த பாடங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் படிக்கும் காலத்திலேயே மனநலன் பற்றி இளம் வயதினருக்குப் புரிதல் ஏற்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE