சிவகங்கையில் டிராகன் பழ சாகுபடியில் அசத்தும் ஓய்வுபெற்ற அதிகாரி!

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: டிராகன் பழம் கள்ளி வகை பழப்பயிர். மருத்துவக் குணம் கொண்ட இப்பழத்தை சிவகங்கை மாவட்டம் அழகாபுரியைச் சேர்ந்த கே.முருகப்பன் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

இவர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2.5 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்துள்ளார். ஏக்கருக்கு 2,000 செடிகள் வீதம் 5,000 செடிகள் வரை நடவு செய்துள்ளார். மாதம் 2 முறை பழங்களை பறிக்கின்றனர். ஏக்கருக்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது.

அவற்றை கிலோ ரூ.100-க்கு மதுரையில் விற்பனை செய்து வருகிறார். இது குறித்து கே.முருகப்பன் கூறியதாவது: நான் ஓய்வு பெற்றதும் விவசாயம் செய்ய முடிவு செய்தேன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தியை பார்த்து 2021-ம் ஆண்டு டிராகன் பயிரிட்டேன். எனக்கு சொந்தமான 8 ஏக்கரில் 2.5 ஏக்கரில் 5,000 செடிகளை நடவு செய்துள்ளேன்.

ஒரு செடி ரூ.80 வீதம் மதுரை மாவட்டம் பூசுத்தியைச் சேர்ந்த விவசாயியிடம் வாங்கினேன். செடி வாங்கியது, கல் ஊன்றியது, டயர் கட்டியது, நடவு செய்தது என ஏக்கருக்கு ரூ.8 லட்சம் வரை செலவு செய்தேன்.

கே.முருகப்பன்

இது தவிர களையெடுப்பு, கவாத்து செய்ய வேண்டும். கடந்த ஏப்ரலில் இருந்து பழங்களை அறுவடை செய்கிறோம். வறட்சியான பகுதிக்கு டிராகன் பழம் ஒரு வரப்பிரசாதம் என அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE