வாசகர்கள் புத்தகத்தை ஒப்படைக்காவிட்டால் நூலகர்கள் ‘தலையில் விழும்’ அபராதம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தலைவர்கள், அறிஞர்களை உருவாக்கியது அவர்களுடைய வாசிப்பு பழக்கமே. வாசிப்பு, வாழ்க்கை அனுபவத்தைக் கற்றுத் தருவதோடு கற்பனை ஆற்றல், படைப்பாற்றலை கொடுக்கிறது. ஆனால், எல்லோராலும் நினைத்த புத்தகங்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடியாது.

அதற்காகவே மருத்துவமனைகள், பள்ளிகள் இல்லாத ஊர்களிலும்கூட நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட மைய நூலகங்கள், அதற்கடுத்த நகரங்கள், கிராமங்களில் கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 4,634 நூலகங்கள் உள்ளன.

நகர்ப்புற நூலகங்களாக இருந்தால் ரூ.20 காப்புத் தொகையும், ரூ.10 ஆண்டு சந்தாவும் செலுத்தி உறுப்பினராகலாம். கிராமப்புற நூலகங்களாக இருந்தால் ரூ.15 காப்புத் தொகையும், ரூ.5 ஆண்டு சந்தாவும் செலுத்த வேண்டும். ஆதார், ரேஷன் அட்டை மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்தபிறகே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினராவதற்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உறுப்பினராவோர்

இந்த அட்டையைக் காட்டி வீட்டுக்கு ரூ.300 வரை மதிப்புள்ள புத்தகத்தை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலான மதிப்புள்ள புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாது. நூலகத்தில் மட்டுமே படிக்க முடியும். எடுத்துச் செல்லும் புத்தகங்களை 2 வாரத்துக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் வாரத்துக்கு 50 பைசா காலம் கடந்த கட்டணம் (அபராதம்) செலுத்த வேண்டும்.

இந்த 50 பைசா தற்போது புழக்கத்திலே இல்லாதநிலையில் அதை வசூல் செய்ய முடியாமல் நூலகர்கள் புலம்புகிறார்கள். அபராதத் தொகை மிகக் குறைவாக இருப்பதால் எது பற்றியும் கவலைப்படாமல் ஆண்டுக்கணக்கில் நூலகத்தில் எடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருப்போரும் உண்டு.

நூலகர்கள், சந்தாதாரர்களை மொபைல் போனில் அழைத்துப் பேசியும், வீட்டுக்குச் சென்று கெஞ்சியும் புத்தகத்தைப் பெற வேண்டிய நிலை உள்ளது. புத்தகத்தை தர மறுப்போர் மீது காவல் நிலையங்களில் புகார் செய்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால், இப்படி புத்தகங்களை எடுத்துச் செல்லும் எல்லோரையும் பின் தொடர்ந்து புத்தகங்களை வாங்க முடியாது.

வாடகை வீட்டில் இருப்போர் மாறிச் சென்று விடுவதால் கடிதம் போட்டால் ஆள் இல்லை என திரும்பிவிடுகிறது. இப்படி ஒவ்வொரு நூலகத்திலும் திரும்பி வராத புத்தகங்கள் ஏராளம். அதற்கான அபராதத்தையும் வசூலிக்க முடியாது. மதுரை மாவட்ட மைய நூலகத்தில் மட்டுமே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் திரும்பி வராமல் உள்ளன.

ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறையும், 10 ஆண்டுக்கு ஒரு முறையும் நூலகங்களில் உள்ள புத்தகங்கள் தணிக்கை (ஆடிட்) செய்து கணக்குப் பார்க்கப்படுகிறது. அதுபோல், நூலகர்கள் இடமாறுதல் பெற்றுச் செல்லும் போதும் அந்த நூலகத்தின் புத்தகங்கள் இருப்பு சரிபார்க்கப்படுகிறது.

அப்போது, உறுப்பினர்கள் எடுத்துச்சென்று வராத புத்தங்களுக்கான தொகையையும், அதற்கான அபராதமும், நூலகர்கள் தலையில் சுமத்தப் படுகிறது. மீட்பு (ரெக்கவரி) என்ற பெயரில், நூலகர்களின் மாத ஊதியத்தில் இந்தத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து நூலகர்கள் கூறியதாவது: 15 நாட்களில் புத்தகங்கள் திரும்பி வராவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கத் தொடங்குவோம். 15 நாட்களில் புத்தகத்தை படிக்க முடியாவிட்டால், அவர்கள் நூலகத்துக்கு வந்து அந்த புத்தகத்தின் கால அளவை நீட்டிப்புச் செய்து மீண்டும் எடுத்துச் செல்லலாம். அபராதத் தொகையை உயர்த்தினால், அதற்காக வாசகர்கள் படிக்க வராமல் போய்விடுவார்களோ என்ற

எண்ணத்தில் அவர்களை அணுகி அரசு இந்தக் குறைந்தபட்சத் தொகையை அபராதமாக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், நூலகர்களிடம் கருணை காட்டினால் வாசகர்கள் திருப்பித் தராத புத்தகத்துக்கான தொகையையும், அபராதத் தொகையையும் ஊதியத்தில் பிடித்தம் செய்கிறார்கள். 50 பைசாதானே அபராதம் என்ற அலட்சியத்தில் பலர் புத்தகத்தை திருப்பி ஒப்படைப்பதில்லை. நூலகத் துறையில் முறையிட்டும், ஊதியத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறையை இன்னும் கைவிடவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE