இமயமலையில் ரஜினிகாந்த் உற்சாக பயணம்: ‘ஜெயிலர்’ வெற்றியால் மகிழ்ச்சி.. காசு வாங்காத கடைக்காரர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பாபாஜி பக்தர்களுடன் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் கடந்த 9-ம் தேதி புறப்பட்டு ஒரு வார ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

‘ஜெயிலர் திரைப்படம் வெளியான அன்று ரிஷிகேஷில் இருந்த ரஜினிகாந்த், முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்கள் மூலம் திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தெரிந்துகொண்டு உற்சாகமாகியுள்ளார். படத்தின் வெற்றிக்கும், இமயமலை பயணத்துக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

‘பாபா’ திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக இமயமலைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள ரஜினி, ‘‘இங்கு வரும்போதெல்லாம் எனக்கு தனி சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியின் வெளிப்பாட்டில் ஒன்றுதான் தற்போதைய ஜெயிலர் படத்தின் வெற்றியும்’’ என்று, உடன் பயணிப்பவர்களிடம் உற்சாகமாக பேசியுள்ளார்.

‘ஜெயிலர்’ ரிலீஸ் நேரத்தில் பயணம் மேற்கொள்வதால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு, மாறுவேடத்தில் செல்லவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், ரசிகர்களின் அன்பு காரணமாக முகத்தைகூட மூடாமல் அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார். ‘‘தியேட்டர்கூட இல்லாத இந்த இடத்தில, ரசிகர்கள் ‘ஜெயிலர்.. ஜெயிலர்’னு உற்சாகமா வரவேற்கிறத பார்க்கும்போது, நெகிழ்ச்சியா இருக்கு’’ என்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இந்த முறை பயணத்தில் குடும்ப நபர்கள் யாரையும் அவர் உடன் அழைத்துச் செல்லவில்லை. ரஜினியின் நண்பர்கள் ஹரி, வெங்கட், மூர்த்தி மூவரும் பிரதானமாக இடம்பெற்றுள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து சாலையோர கடைகளில் பொங்கல். உப்புமா சாப்பிட்டும், டீ குடித்தும் இயல்பாக பயணம் மேற்கொண்டு வருகிறார் ரஜினி. ‘‘உங்ககிட்ட காசு வாங்க மாட்டோம்’’ என்று கடைக்காரர்களும் அன்போடு தெரிவிப்பதாக உடன் செல்லும் நண்பர்கள் கூறுகின்றனர்.

கடந்த 3 நாட்களில் ரிஷிகேஷ், பத்ரிநாத் பயணத்தை முடித்த ரஜினி, இன்று இமயமலையில் பாபாஜி பக்தர்களுக்காக துவாரகா பகுதியில் தான் நிறுவியுள்ள ஆசிரமத்தில் ஓய்வெடுக்கிறார். பின்னர், பாபாஜி குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து வரும் 17-ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ரஜினி கடந்த 21 ஆண்டுகளாக இமயமலைக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2019-ல் சென்ற அவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பயணம் வந்துள்ளார். இந்த அளவுக்கு அவரை மகிழ்ச்சியாக பார்த்ததே இல்லை. ஜெயிலர் திரைப்படம் தந்த வெற்றியும் அதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் உடன் சென்றுள்ள நண்பர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE