மதுரை சிறை கைதிகளுக்காக ரூ.75,000-க்கு புத்தகங்கள்,  இசைக் கருவிகள் வழங்கிய ரஜினி ரசிகர் மன்றத்தினர்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மத்திய சிறை கைதிகளுக்காக ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள், இசைக் கருவிகளை ரஜினி ரசிகர் மன்றத்தினர் வழங்கினர்.

மதுரை மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி அமரேஷ்புஜாரி பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிறையில் நூலகத் திட்டம் கொண்டு வந்த நிலையில், 'கூண்டுக்குள் வானம்' என்ற நூலகத் திட்டமும் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள போதிலும், சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அதிக அளவில் அனைத்து மத்திய சிறைகளிலும் பல்வேறு வகையான புத்தகங்களை வழங்குகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள 'ஜெயிலர் ' திரைப்படம் வெளிவருவதையொட்டி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறைத் துறைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தனர். இதன்படி, மதுரை மத்திய சிறையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஜாபர் மற்றும் பால தம்புராஜ், குமாரவேல் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பகுதி ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சரவணன் தலைமையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு புத்தகங்கள் வழங்கினர்.

மேலும், மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள இசைக் கருவிகளை ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் பால நமச்சிவாயம் வழங்கினார்.

இது குறித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ''ஜெயிலர் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு சிறைகளில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்வதற்கு மாநில நிர்வாகிகள் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் மதுரை மத்திய சிறைக்கு சில நலத்திட்ட உதவிகளை செய்தோம்'' என்றனர். விழாவில் மதுரை மத்திய சிறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE