காரிமங்கலம் அருகே விநோத சடங்குகளுடன் 48 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த குருமன்ஸ் மக்களின் திருவிழா

By செய்திப்பிரிவு

தருமபுரி: காரிமங்கலம் அருகே குருமன்ஸ் பழங்குடியின மக்களால் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் திருவிழா ஒருவார காலம் நடந்து முடிந்தது.

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட வட்டங்களில் குரும ன்ஸ் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். முந்தைய காலத்தில் கால்நடை வளர்ப்பை மட்டுமே மேற்கொண்டிருந்த இவர்கள் பிற்காலத்தில் காலத்திற்கேற்ற தொழில்களுக்கு மாறியுள்ளனர்.

பழங்குடியின மக்களின் திருவிழாக்களில் பல விநோத சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களது திருவிழாக்களின் பின்னணியும் வேறுபட்ட தன்மை கொண்டவையாக உள்ளன. இவர்கள் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடக் கூடிய திருவிழாவை, காரிமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெலதப்பசாமி கோயில் வளாகத்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி மாலை வரை ஒருவார காலம் கொண்டாடி முடித்துள்ளனர்.

திருவிழாவில், பல்வேறு விநோத சடங்குகளை நடத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்களின் வாழ்வியல், வரலாறு உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சி.சந்திரசேகர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த விழா குறித்து அவர் கூறியது: காரிமங்கலம் பகுதியில் பெலதப்ப சாமி கோயில் வளாகத்தில் ஒரு வார காலம் நடந்த குருமன்ஸ் பழங்குடியின மக்களின் விழாவுக்காக அதே பகுதியில் திறந்த வெளியில் 700 தற்காலிக அறைகள் உருவாக்கப்பட்டன. விழா நடைபெற்ற ஒருவாரமும் விழாவில் பங்கேற்றவர்கள் குடும்பங்களாக அங்கேயே தங்கியிருந்து சமைத்து உண்டு விழாவை நடத்தியுள்ளனர்.

22-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் நவகண்டம் எனும் நிகழ்ச்சி நடந்துள்ளது. கடவுளுக்கு தன் உடலில் 9 இடங்களில் இருந்து சதையை அரிந்து காணிக்கையாக வழங்கும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. இதை, இன்றளவும் கடைபிடிக்கும் வகையில் திருவிழாவின் போது சம்பிரதாயமாக சதையை அரிந்து தருவது போன்றதொரு விநோத நிகழ்ச்சியை நடத்தினர்.

தருமபுரி மாவட்டத்தில் பல இடங்களில் ஏராளமாக காணக் கிடைக்கும் நவகண்ட கற்கள் குருமன்ஸ் இன மக்களின் இப்பகுதியுடனான தொன்மை வரலாற்றுக்கு சான்றாக உள்ளன. விரதமிருந்து பூஜை செய்பவர்களுக்கு இந்த விழாவின் போது ஆட்டுப் பாலையும், மஞ்சள் பொடியையும் கலந்து தயிராக உறையச் செய்த பின்னர் அதில் பழ வகைகளை கலந்து ‘மஜனை’ என்னும் பிரசாதம் தயார் செய்து உண்ணத் தரப்படுகிறது.

கசவம்மா கூத்து என்னும் புகழ்பெற்ற கூத்து நிகழ்ச்சி விழாவில் இடம்பெற்றது. இவ்வாறு பல்வேறு விநோத நிகழ்ச்சிகள், பூஜைகளையும் நடத்தி முடித்துள்ளனர். இவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த திருவிழாவில், பேராசிரியர் வேலவன், கர்நாடகாவைச் சேர்ந்த பழங்குடிகள் துறை பேராசிரியர் கே.எம்.மேத்ரி, வரலாற்று மாணவர் இளந்திரையன் ஆகியோருடன் இணைந்து ஆய்வு நடத்தி பல தரவுகளையு திரட்டியுள்ளோம். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE