ரிலாக்ஸ் ஸ்டேஷன் | டெலிவரி பிரதிநிதிகள் இளைப்பாற உதவும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்

By செய்திப்பிரிவு

மும்பை: மற்றவர்களின் பசிப்பிணியை போக்கும் உன்னத பணியை செய்து வரும் உணவு டெலிவரி பிரதிநிதிகள் இளைப்பாற செய்யும் வகையில் ‘ரிலாக்ஸ் ஸ்டேஷன்’ அமைத்துள்ளார் இளைஞர் ஒருவர். அவரது முயற்சி நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மும்பையில் இந்த ஏற்பாட்டை அவர் செய்துள்ளார்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் கைபேசிக்குள் அடங்கியுள்ளது. அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும். அதற்கென இந்தியாவில் பல உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் லட்சக் கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தங்களது பணியில் அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் பல. மழை, வெயில், பனி என இயற்கையை சமாளித்தபடி இரவு பகல் பார்க்காமல் பணி செய்து வருகிறார்கள். மழை நேரங்களில் அவர்கள் பணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெறும். பெரும்பாலும் நகர வீதிகளின் சாலை ஓரத்தில் ஆர்டருக்காக மொபைல் போனை பார்த்தபடி கத்திருப்பார்கள். அது அவர்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும் நேரமும் கூட. இந்த சூழலில் அவர்களை இளைப்பாற செய்யும் வகையில் ரிலாக்ஸ் ஸ்டேஷன் முயற்சியை முன்னெடுத்துள்ளார் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சரான சித்தேஷ்.

“வானிலையை கருத்தில் கொள்ளாமல் டெலிவரி பிரதிநிதிகள் நமக்காக பணி செய்து வருகின்றனர். அவர்களை இளைப்பாற செய்யும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சி தான் இது. நமக்காக பணி செய்பவர்களுக்கு புன்னகையுடன் நன்றி சொல்லும் முயற்சி இது” என சித்தேஷ் சொல்கிறார். இங்கு டெலிவரி பிரதிநிதிகளுக்கு தேநீர் மற்றும் சமோசா போன்றவை வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE