பாம்பே ஐஐடி-க்கு இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி ரூ.315 கோடி நன்கொடை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி, பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதற்கு முன்னர் இதே ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு 85 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். ஓட்டுமொத்தமாக 400 கோடி ரூபாயை அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஐஐடி-பாம்பே, என் வாழ்க்கையில் எனக்கு அடித்தளமாக அமைந்தது. எனது பயணத்தின் தொடக்கப்புள்ளி. இந்த நன்கொடை நிதி சார்ந்து பங்களிப்பு என்பதை விடவும் அதிகம். எனக்கு அனைத்தும் அதிகம் கொடுத்த இடத்திற்கு நான் செய்யும் ஒரு மரியாதை இது. நாளை நம் உலகத்தை வடிவமைக்கும் மாணவர்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு” என அவர் தெரிவித்துள்ளார். ஐஐடி பாம்பே உடன் தனது 50 ஆண்டு கால பயணத்தை குறிப்பிடும் வகையில் இது அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐஐடி பாம்பேவில் அவர் பொறியியல் பட்டம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான ஒப்பந்தம் பெங்களூருவில் இன்று உறுதி செய்யப்பட்டது. இதில் நந்தன் நீலகேணி மற்றும் பாம்பே ஐஐடி-யின் இயக்குனர் மற்றும் பேராசிரியர் சுபாசிஸ் சவுத்ரி கையெழுத்திட்டுள்ளனர். உலகத்தரம் வாய்ந்த வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பொறியியல் & தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE