திண்டுக்கல் | 5-வது  தலைமுறையினருடன் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

By பி.டி.ரவிச்சந்திரன்


நத்தம்: நத்தம் அருகே லிங்கவாடியில் தனது 100வது பிறந்தநாளை மூதாட்டி ஒருவர் 5வது தலைமுறை உறவுகளுடன் கொண்டாடினார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மனைவி சீனியம்மாள்(100), இவருக்கு ஐந்து மகன்கள், நான்கு மகள்கள். இதில் ஒரு மகன் ராணுவத்தில் பணிபுரிந்து உயிர் நீத்தவர். தாயாரின் 100வது பிறந்தநாளை பேரன், பேத்தி, கொள்ளுபேத்தி என அனைத்து உறவுகளுடனும் கொண்டாட மகன், மகள்கள் முடிவு செய்தனர். இதையடுத்து லிங்கவாடியில் சீனியம்மாளின் மகன்கள், மகள்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுபேத்திகள், எள்ளுபேத்திகள் என மொத்தம் 85 பேர் ஒன்றிணைந்து சீனியம்மாளின் 100வது பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

ஊர் மந்தையில் மரக்கன்றுகளை நட்டு வெடிகள் வெடித்து ஊர்வலமாக மூதாட்டி சீனியம்மாளை அங்குள்ள மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். மண்டபத்தில் மேலும் ஆரோக்கியத்துடன் சீனியம்மாள் வாழ யாகங்கள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மூதாட்டி சீனியம்மாளை கேக் வெட்டச் செய்து 100 வது பிறந்தநாளை உறவுகள் கூடி நின்று கொண்டாடினர். இதில் ஊர்மக்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. சீனியம்மாள் சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர்.

தனது 75 வது வயதில் கணவரை இழந்த நிலையில், இதன் பின் இயற்கை உணவுகளாக கீரை வகைகள், சுண்டைக்காய், பச்சை காய்கறிகள், நாட்டுக்கோழி ஆகியவற்றை தனது உணவாக எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது 100 வயதை கடந்தபோதும், பிறர் துணைதேடாமல் தானே சமையல் செய்வது, கடைகளுக்கு செல்வது என தனக்கு தேவையானவற்றை தானே செய்துகொள்கிறோர்.

ஐந்தாவது தலைமுறையினருடன் தனது பிறந்தநாளை சீனியம்மாள் கொண்டாடியது, அவரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE