காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

சிவகங்கை: காளையார் கோவிலில் பாண்டியன் கோட்டையில் கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார்கோவிலில் உள்ள பாண்டியன் கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகளை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டெடுத்தனர்.

இது குறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்ற சங்க இலக்கியச் சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை காளையார்கோவிலில் உள்ளது. தற்போது பாண்டியன் கோட்டை சிதிலமடைந்த நிலையில் ஆழமான அகழி, நீராவி குளம் போன்றவை உள்ளன. இக்கோட்டை மேடு 37 ஏக்கர் பரப்பில் வட்ட வடிவில் அமைந்துள்ளது.

மேலும் இக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் காவல் தெய்வமாக முனீஸ்வரர் கோயிலும், தெற்குப் பகுதியில் வாள் மேல் நடந்த அம்மன் கோயிலும் உள்ளன. பாண்டியன் கோட்டைப் பகுதியில் ஏற்கெனவே சங்க காலச் செங்கல் எச்சங்கள், கூரை ஓடு எச்சங்கள், மண்ணால் ஆன உருண்டைகள், வட்டச் சில்லுகள், தமிழி எழுத்தில் பெயர் பொறித்த பானையோடுகள் ஆகியன கிடைக்கப்பெற்றன.

தற்போது மூன்று பானை ஓட்டில் கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்றில் ஆங்கில எழுத்து இசட் போன்றும், மற்றொன்றில் முக்கோண வடிவில் கீழே கால்கள் வரையப்பட்டதைப் போன்றும், மூன்றாவதில் மீன் அல்லது வில் - அம்பின் முனை போன்றும் உள்ளது. மேலும் அழுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அழகான வேலைப்பாடுடைய பானைகளை வடிவமைத்துள்ளனர்.

ஒரு பானை ஓட்டின் மேற்பகுதியில் பாயை விரித்து வைத்தது போல் உள்ளது. இது குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE