ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்

By செய்திப்பிரிவு

லக்னோ: இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற் காக ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞரின் பைக்கை உ.பி. மாநில போலீஸார் பறிமுதல் செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கவுதம்பள்ளி போலீஸ் சரகத்துக்குட்பட்ட யூடியூபர் ஒருவரின் பைக்கை போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். அவர் ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்து அதை மற்றொருவர் மூலம் வீடியோவில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே கடந்து சென்றனர்.

இதைப் பார்த்த கவுதம் பள்ளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர் குமார், அந்த இளைஞரின் பைக்கை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து சுதிர் குமார் கூறும்போது, “உங்களைப் பற்றி உங்கள் பெற்றோர் வேண்டுமானால் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் நாங்கள் கவலைப்பட்டே ஆகவேண்டும்.

சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை நாங்கள் விரும்புகிறோம். எனவே சாகசத்தில் ஈடுபட்ட யூடியூபரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். பின்னர் அந்த இளைஞருக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

இந்த இளைஞர் இன்ஸ்டாகிராமின் ரீல்ஸில் வீடியோவைப் பதிவேற்றுவதற்காக பைக்கில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் கடந்த மார்ச் 31-ம் தேதி மும்பை போலீஸார், பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE