யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: டாப் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2022) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

இஷிதா கிஷோர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கரிமா லோஹியா இரண்டாவது இடமும், உமா ஹாரதி.என், ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களை மயூர் ஹசாரிகா, கஹானா நவ்யா ஜேம்ஸ், வசீம் அகமது பட், அனிருத் யாதவ், கனிகா கோயல், ராகுல் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பிடித்துள்ளனர்.

2022-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி மெயின் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடந்தது. நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்டன. 933 பேர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்கள் அவர்களது தரவரிசையின்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் குரூப் ஏ, பி, பணிகளில் அமர்த்தப்படுவர். இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) - முக்கிய அம்சங்கள்

இடஒதுக்கீடு விவரம்:

1) இந்திய ஆட்சிப் பணி
2) இந்திய வெளியுறவுப் பணி
3) இந்திய காவல் பணி மற்றும்
4) மத்தியப் பணிகள், குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ மொத்தம் 933 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொதுப்பிரிவினர் 345 பேர், இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 99 பேர், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 263 பேர். ஷெட்யூல்டு வகுப்பினர் 154 பேர், ஷெட்யூல்டு பழங்குடியினர் 72 பேர். இந்திய ஆட்சிப் பணிக்கு 180 பேரும், இந்திய வெளியுறவுப் பணிக்கு 38 பேரும் இந்திய காவல் பணிக்கு 200 பேரும், மத்திய அரசின் குரூப் ‘ஏ’ பணிக்கு 473 பேரும், குரூப் ‘பி’ பணிக்கு 131 பேரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE