வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பயங்கரவாதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது - ஜம்மு காஷ்மீர் ஆளுநர்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆற்றிய உரை விவரம்: "இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட பயங்கரவாத ஊக்குவிப்பு காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் அமைதியை இழந்தது.

இந்த பயங்கரவாதத்தால் ஏறக்குறைய எல்லா மதத்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்கள் காரணமாகவும், அவற்றை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு திறம்பட செயல்படுத்தியதன் காரணமாகவும் இங்கு இருந்த பயங்கரவாதத்துக்கு ஆதரவான சூழ்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு பிரிவினர் எதிர்கொண்ட அநீதி, சுரண்டல், பாகுபாடு ஆகியவை தற்போது அகற்றப்பட்டுள்ளன.

பல துறைகளில் வளர்ந்த மாநிலங்களுக்கு இணையான வளர்ச்சியை ஜம்மு காஷ்மீர் கொண்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஜம்மு காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதே எங்கள் இலக்கு. அடிமட்ட அளவில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் வரத்தொடங்கி உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வரத் தொடங்கி உள்ளனர். விவசாய வளர்ச்சி கிராமங்களை செழிப்பாக்கி வருகிறது. கட்டமைப்பு வளர்ச்சிகள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சமூகமாக ஜம்மு காஷ்மீர் சமூகத்தை மாற்றுவதற்கான தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 1.80 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீர் வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்கு 7 சதவீதத்தைக் கடந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரைப்பட ஷூட்டிங்குகள் இங்கு நடந்துள்ளன. பாலிவுட் உடனான தனது உறவை ஜம்மு காஷ்மீர் புதுப்பித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு கடந்த 2021ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திரைப்படக் கொள்கை, அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் சுற்றிப் பார்க்க வேண்டிய முதல் 50 இடங்களில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளால் ஜம்மு காஷ்மீர் நிறையும். சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் இங்கு நிறைய இருக்கின்றன." இவ்வாறு ஆளுநர் மனோஜ் சின்ஹா உரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE