பெங்களூரு | சுரங்கப்பாலத்தின் கீழ் தேங்கிய வெள்ள நீரில் சிக்கி இளம்பெண் பலி: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஐடி ஊழியரான 23 வயது இளம் பெண் கே.ஆர்.சர்கிள் சுரங்கப்பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் சித்தராமையா, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் பானுரேகா. 23 வயதான பானுரேகா விஜயவாடாவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் தன் குடும்பத்தாருடன் பெங்களூருவுக்கு சுற்றுலா வந்த அவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சுரங்கப்பாலத்தில் தண்ணீர் தேங்கியிருந்தபோது கடந்துவிடலாம் என நினைத்து காரை செலுத்தியிருக்கலாம் ஆனால் வெள்ளம் அதிகமாக இருக்கவே கார் மாட்டிக் கொண்டது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பானு ரேகா மூச்சுத் திணறி உயிரிழக்க உடன் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE