உத்தராகண்ட் பாஜக பிரமுகர் மகள் முஸ்லிமை மணக்க எதிர்ப்பு: கொடும்பாவி எரித்து நிபந்தனை விதிக்கும் கட்சியினர்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில பாஜக பிரமுகர் யஷ்பால் பேனம் மகளுக்கு ஒரு முஸ்லிம் மணமகனுடன் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜகவினர் யஷ்பாலின் கொடும்பாவியை எரித்ததோடு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பிரமுகர் வீட்டுத் திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. உத்தராகண்டின் பவுரி நகர முனிசிபல் தலைவரான யஷ்பால், அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார்.

லக்னோ பல்கலைகழகத்தில் பயின்று வந்த யஷ்பாலின் மகள், அங்கு உத்தரப் பிரதேசத்தின் அமேதிவாசியான முகமது மோனிஸ் என்ற முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரது திருமணம் வரும் மே 28 இல் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கு உத்தராகண்ட் மாநிலத்தின் பல இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்துடன், இந்து-முஸ்லிம் திருமணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து வருகின்றனர்.

உத்தராகண்டின் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி), பைடவ் சேனா மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் ஒன்றுகூடி, பவுரியின் தர்மசாலாவில் கூட்டம் நடத்தினர். இதில், அனைவரும் திருமணத்தை கண்டித்து பேசிய பின் ஊர்வலமாக முக்கிய சந்திப்பிற்கு வந்து, யஷ்பாலின் கொடும்பாவியை எரித்தனர்.

இதுகுறித்து பவுரி மாவட்ட விஎச்பி தலைவர் தீபக் கவுர் கூறும்போது, ‘இதுபோன்ற திருமணங்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில், வருங்காலத்திற்கு இவை தவறான முன் உதாரணங்களை உருவாக்கும்.

எனவே, யஷ்பாலின் மகள் முஸ்லிமாக மதம் மாறிவிட வேண்டும். இல்லையெனில், அவரது முஸ்லிம் மணமகன் நம் இந்து மதத்திற்கு மாறுவது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மீது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிராந்தியப் பிரச்சாரகரான அவ்தேஷ் குமார் கூறுகையில், ‘இதுபோன்ற திருமணங்களுக்கு அழைப்பிதழை அச்சடித்து பிரதானமாக நடத்துவது சமூகத்தில் தவறான கருத்துக்களை ஏற்படுத்தும். ஏனெனில், இந்தவகை திருமணங்களால் சனாதன தர்மத்திற்கு சிக்கல் ஏற்படும். எனவே இவற்றை பொதுவெளியில் தெரியும்படி நடத்துவது கூடாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தம் குடும்பத்தின் திருமணம் மீது முன்னாள் பாஜக எம்எல்ஏவான யஷ்பாலின் குரல்பதிவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர், "இந்த திருமணம் இரண்டு குடும்பங்களில் சம்மதத்துடன் இந்து முறைப்படி நடக்கிறது. இந்த திருமணத்திற்காக எனது மகளோ அல்லது அவரது மணமகனோ மதம் மாறப் போவதில்லை. இதுபோன்ற திருமணங்கள் நம் சமூகத்தில் புதிதல்ல. இதற்கு முன்பும் இரண்டு மதத்தினருக்கும் இடையிலான திருமணங்கள் பலவும் நடைபெற்றுள்ளன. திருமணங்கள் என்பது தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படுவது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தராகண்டின் பாஜக பிரமுகரான யஷ்பால் குடும்பத்தை போல் அவரது முக்கியத் தலைவர்களது வீடுகளில் இரண்டு மதத்தினர் இணைந்த திருமணங்கள் பல நடைபெற்றுள்ளன. எனினும், அப்பெரும் தலைவர்கள் இந்த திருமணங்களுக்கு சம்மதித்து ஏற்றது பற்றி எவரும் கண்டித்து பேசியதாகத் தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE