“ஆணவத்தின் முழு உருவம்” - கேஜ்ரிவாலை கடுமையாக சாடிய குஷ்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றது குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கேஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், “ஆணவத்தின் முழு உருவம். அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஒரு தன்மை இருக்க வேண்டும். நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல” என்று கடிந்து கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE